வட கிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் புயல்..2023 ஜனவரி வரை தமிழகத்தை வச்சு செய்யப்போகும் மழை
சென்னை: நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையின் போது புயல் உருவாகும் வாய்ப்பு குறைவு தான் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை காலம் அதிக அளவில் மழையை கொடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. வழக்கத்தை விட தாமதமாக பருவமழை தொடங்கினாலும் பல பகுதிகளில் கொட்டித்தீர்த்தது. நவம்பர் 1ம் தேதி நுங்கம்பாக்கம் பகுதியில் 8 செமீ மழை பெய்துள்ளது, இது 30 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையும், 72 ஆண்டுகளில் 3வது மழையும் ஆகும்.
நவம்பர் 1, 1964 அன்று, நுங்கம்பாக்கத்தில் 11 செ.மீ மழை பெய்தது, 1990 இல் இந்த எண்ணிக்கை 13 செ.மீ ஆக இருந்தது என்று சென்னை மண்டல வானிலை மையத்தின் தலைவர் டாக்டர் எஸ் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை மாவட்டத்தில் இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை 20 செ.மீ மழை பெய்துள்ளது. வழக்கமாக, இந்த நேரத்தில் சென்னையில் 28 செ.மீ மழை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் இயல்பை விட குறைவாகவே பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை
இதனிடையே வடகிழக்கு பருவமழை குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் பெரும்பாலும் காற்றழுத்தங்கள், காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு குறைவாக உள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்தம்
வருகிற 10ஆம் தேதி வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை, தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும். வருகிற 15-ந்தேதி உருவாகும் காற்றழுத்தம் தமிழகத்தின் மையப் பகுதியை நோக்கி நகர்ந்து செல்லும். அப்போது தமிழகம் முழுவதும் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மழை பெய்யும். குறிப்பாக இயல்பை விட அதிக அளவில் மழை பெய்யக் கூடும்.

நவம்பர் இறுதி மழை
இந்த மாதம் 4வது வாரத்தில் ஒரு காற்றழுத்தம் உருவாகி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன் காரணமாக தமிழகத்தில் 27ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் 28, 29, 30 ஆகிய தேதிகளிலும் ஒரு நிகழ்வு உருவாகும். இதன் மூலம் டிசம்பர் 20ஆம் தேதி வரை மழை பெய்யும்.

2022 ஆண்டு இறுதி மழை
டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாகிறது. இது சிறிய புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. இந்த புயல் கடல் பகுதியில் உருவாகும் நீராவியை மட்டும் கொண்டு வந்து மழையாக பெய்யும். டிசம்பர் மாத இறுதியில் மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகும். அதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.

2023 புத்தாண்டு மழையோடு ஆரம்பம்
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1, 2, 3-ந்தேதிகளில் காற்றழுத்தம் உருவாக உள்ளது. ஜனவரி மாதம் 3வது வாரத்திலும் ஒரு காற்றழுத்தம் உருவாக உள்ளது. அப்போது தென் மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே இந்த வடகிழக்கு பருவமழை காலம் அதிக அளவில் மழையை கொடுக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டை நினைவூட்டும் மழை
கடந்த 2015ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் காற்றழுத்தம் காரணமாகவே நவம்பர் மாதத்திலும் டிசம்பரிலும் அதிக அளவு மழை பெய்தது. ஏரிகள் நிரம்பி வழிந்தன. கனமழையாலும் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னையிலும் புறநகரிலும் பெருவெள்ளம் சூழ்ந்தது. இந்த ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications