”டிட்வா”வை போல சம்பவம் செய்யும்.. டிசம்பர் இறுதியில் ’புயல்’ உருவாக வாய்ப்பு.. டெல்டா வெதர்மேன்
சென்னை: இந்த டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும் என்றும், வரும் டிசம்பர் 23 ஆம் தேதிக்கு பிறகு தெற்கு வங்கக் கடலில் ஒரு புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். இந்த புயல் டிட்வா புயலை போலவே குமரி முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்களில் நல்ல மழையை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
வரும் 15 ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தொடர்ந்து 20 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் இதனால் தமிழகத்தில் மீண்டும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தொடங்கும்போதே தமிழகம் முழுக்க பரவலாக கனமழை பெய்தது. மேலும் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாகவே பெய்திருந்தது. ஆனால் நவம்பர் மாதம் பிறந்ததும் மழை அப்படியே குறைந்தது.
நவம்பர் மாத முதல் இரண்டு வாரங்களுக்கு மழையே இல்லாமல் வெயில் அடிக்க ஆரம்பித்தது. இதனால் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போகுமோ என விவசாயிகள் கலங்கிய நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் பலரும் நவம்பர் மாத கடைசி இரண்டு வாரங்களில் கனமழை பெய்யும் எனவும், புயல் உருவாகும் என்றும் இதனால் சென்னையில் அதி கனமழை கூட பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறியிருந்தனர்.
சொன்னது போலவே வெளுத்து வாங்கிய மழை
சொன்னது போலவே மழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கியது. டிட்வா புயல் காரணமாக தென் மாவட்டங்கள் முதல் சென்னை வரை பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறின. பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை விடும்படி நிலைமை ஆனது.
இந்த சூழலில் தற்போது தான் மழை சற்று குறைந்துள்ளது. இனி ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. எனினும் டிசம்பர் மாதம் என்றாலே எப்போதும் தமிழகம் அல்லது சென்னையில் கனமழை, புயல் இருக்கும் என இதற்கு முன்பு நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன.
இம்மாத இறுதியில் புயல் உருவாக வாய்ப்பு
அந்த வகையில் இம்மாத இறுதியில் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும், அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும் என்றும், வரும் டிசம்பர் 23 ஆம் தேதிக்கு பிறகு தெற்கு வங்கக் கடலில் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் இது டிட்வா புயலை போலவே நல்ல மழையை கொடுக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் இன்று, நாளை கிழக்கு திசை காற்றின் ஊடுருவல் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை கிழக்கு திசை காற்றினால் தமிழகத்தில் மீண்டும் மழைக்கான சூழல் தொடங்கும். இதனால் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.
அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்
தொடர்ந்து கடல் சார்ந்த அலைவுகள் சாதகமாக அமைவதால், வரும் 15 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் பருவமழை தீவிரமடையும். அதாவது 15 ஆம் தேதி அளவில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இதனால் டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனை தொடர்ந்து 20 ஆம் தேதி வாக்கில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் இதனால் சென்னை முதல் குமரி வரை கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும்.
தொடர்ந்து வரும் 23 ஆம் தேதி அளவில் தெற்கு வங்கக் கடலில் ஒரு புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. இது டிட்வா புயலை போல தமிழகத்தில் நல்ல மழையை கொடுக்கும். வடகிழக்கு பருவமழை வரும் ஜனவரி மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications