"கவனமா இருங்க.!" நெருங்கும் மாண்டஸ் புயல்.. கலெக்டர்களுக்கு நேரடியாக போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மாண்டஸ் புயல் நெருங்கி வரும் நிலையில், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு முதல் புயலாக மாண்டஸ் புயல் சில நாட்களுக்கு முன்பு உருவானது. இந்தப் புயல் சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவிலும் மாமல்லபுரத்தில் இருந்து 135 கிமீ தொலைவில் இப்போது நிலை கொண்டுள்ளது.
மணிக்கு சுமார் 10 முதல் 15 கிமீ வேகத்தில் நகரும் இந்த மாண்டஸ் புயல் இன்றிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கரையை ஒட்டியுள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நெருங்கி வரும் மாண்டஸ் புயல்.. எங்கெல்லாம் கனமழை இருக்கும்! காற்றின் வேகம் எப்படி? பாலசந்திரன் தகவல்
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
புயல் காரணமாகச் சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.
நடவடிக்கை
மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அங்குள்ள அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். மேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக மாண்டஸ் புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அதிகாரிகள் முதல்வரிடம் விளக்கினர்.
ஆலோசனை
அதன் பிறகு அவசர கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே புயலால் பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களின் கலெக்டர்களிடம் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். புயல் நிலைமை குறித்தும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். எந்த இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது என்பது குறித்து செங்கல்பட்டு ஆட்சியரிடம் கேட்டறிந்தார். புயல் கரையைக் கடப்பதால் கவனமாக இருக்கும்படியும் அறிவுறுத்தினார்.
கனமழை
சற்று நேரத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன், மாண்டஸ் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவித்தார். காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீட்டராக உள்ளதாகத் தெரிவித்த அவர், கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்றும் புயல் காரணமாகக் கடலோர பகுதிகளில் தீவிர கனமழை இருக்கும் என எச்சரித்தார், மேலும், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின்
ஆயுவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஏற்கனவே சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், கூடுதலாக பல்வேறு மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு ஆபீசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். எவ்வளவு வேகமாகக் காற்றடித்தாலும் மழை பெய்தாலும் அதைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.