அதிகாலையிலேயே களத்தில் இறங்கிய மனோ தங்கராஜ்.. இப்போது சென்னையில் ஆவின் பால் சப்ளை எப்படி இருக்கு
சென்னை: மிக்ஜாம் புயலில் சென்னையில் பால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகப் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை வங்கக் கடலில் மிக்ஜாம் புயல் ஏற்பட்டது. இதனால் சென்னை உட்பட அண்டை மாவட்டங்களில் திங்கள் மாலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் சென்னைக்கு அருகே வந்த நிலையில், அது தீவிர புயலாகவும் வலுப்பெற்றது.

இதன் காரணமாகத் திங்கள் நாள் முழுக்க சென்னையில் கனமழை அடித்து நொறுக்கியது. நேற்று காலை முதலே கனமழை கொட்டி தீர்த்த நிலையில், சென்னையில் எல்லா பகுதிகளிலும் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது.
மிக்ஜாம் புயல்: வங்கக் கடல் கொந்தளிப்புடன் இருந்த நிலையில், கடலும் வெள்ள நீரை உள்வாங்கவில்லை. இதுவே மழை நீர் தேங்குவது அதிகரிக்கக் காரணம் என்று அதிகாரிகள் கூறினர். நேற்று காலை மழை நின்ற நிலையில், முக்கிய இடங்களில் நீர் வடியத் தொடங்கியது. நேற்று பிற்பகலே முக்கிய சாலைகளில் போக்குவரத்து மெல்ல ஆரம்பித்தது. ஆனால், உட்புற சாலைகளில் பல இடங்களில் மழை நீர் தொடர்ந்து தேங்கியே இருந்தது.
புறநகர்ப் பகுதிகள் மட்டுமின்றி நகரிலும் பல இடங்களில் மழை நீர் இருந்தது. இதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க நகர் முழுக்க மழை நீர் தேங்கி உள்ளதால் சென்னையில் ஆவின் பால் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருளான பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
பால் விநியோகம் பாதிப்பு: குறிப்பாகக் குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பத்தினர் பாலுக்கே பல மணி நேரம் அலைந்து திரிந்த ஒரு சூழலே ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நகரில் ஆவின் பால் சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் மட்டுமே தனியார் பால் கிடைத்த நிலையில், அதுவும் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. நேற்று சில உணவகங்கள் இயங்கிய போதிலும், பால் இல்லாமலேயே டீ, காபி விற்கப்பட்டது.
இன்றும் கூட சைதாப்பேட்டை, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பால் வாங்கவே நீண்ட வரிசையில் பொதுமக்கள் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே இன்று அதிகாலையே சென்னையில் உள்ள ஆவின் பால் விற்பனையகங்களில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
கோரிக்கை: வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாகப் பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அம்பத்தூர் பண்ணையில் ஏற்பட்ட வெள்ளம் சீரடையாத காரணத்தால் அங்கிருந்து பால் அனுப்பப்படும் இடங்களில் மட்டும் தாமதம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கaத்தில், "இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதி ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன். நிலைமை நன்கு சீரடைந்து வருகிறது, வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாகப் பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்; அம்பத்தூர் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால், அங்கிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளில் சிறிது காலதாமதம் ஏற்படலாம்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications