145 கிமீ வேகத்தில் புயல்.. 8மணிக்கு ஆரம்பிக்குமாம்.. 6 மணி நேரம் நின்று மிரட்ட போகும் நிவர்!
சென்னை: வங்க கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று இரவு 8மணி அளவில் புதுவை அருகே இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த பருவ மழையில் ஒருமுறை கூட காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகமல் இருந்தது. இந்நிலையில் குமரிக் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவானது.
அது மெல்ல மெல்ல வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கைக்கு தென்கிழக்கே நிலை கொண்டு இருந்தது.

புயலாக மாறியது நிவர்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் நேற்று அதிகாலை புயலாக மாறியது. அதன்பின்னர் புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து வந்தது.

புதுவை அருகே கடக்கும்
நேற்று காலை 11மணி வாக்கில் நிவர் புயல் நகரும் வேகம் 5 கிலோமீட்டராக குறைந்தது. தற்போது புயல் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு நாகப்பட்டினம் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் கணித்திருந்தது. இந்நிலையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் சற்றுமுன் அளித்த பேட்டியில், நிவர் புயலின் ஒரு பகுதி இன்று இரவு 8 மணிக்கு புதுச்சேரி அருகே கரையை தொட்டு கடக்க ஆரம்பிக்கும், அதன் மையப்பகுதி கரையை கடக்க சுமார் 2.5 மணி நேரம் ஆகும். தற்போதைய நிலவரப்படி, புயல் கரையை கடந்த பிறகு, கடலோர மாவட்டங்களில் அதன் தாக்கம் 6 மணி நேரத்துக்கு நீடிக்கும். இதன் பிறகு படிப்படியாக வலுவிழக்கும்" என்றார்.

145 கிமீ வேகம்
புயல் கரையை கடக்கும் போது மணிக்க 120 முதல் 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். கடலில் சீற்றம் அதிகமாக காணப்படும். கடல் அலைகள் 2 மீட்டர் உயரம் வரை எழும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

உச்சகட்ட பாதுகாப்பு
புயல் காரணமாக நாகப்பட்டினம் முதல் சென்னை வரை மிகமிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது. இதன் காரணமாக உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications