வங்கக் கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - எங்கெங்கு மழை
வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை: வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் சென்னை எண்ணூர், நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுபெற்று ஒடிசா மாநிலம் சந்தபாலி அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் தற்போதைய கால நிலையில் அவ்வப்போது புயல்கள் உருவாகிறது. அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் புயல்கள் உருவாவதற்கு காரணம் என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த மே மாதம் அரபிக்கடலில் டவ்தே புயல் உருவானது. இது இந்தியாவின் வட மாநிலங்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.
கிழக்கு வங்க கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா, பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாகி தொடர்ந்து 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் சில இடங்களில் மழை பெய்ய செய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் வங்கக்கடல் பகுதியில் மத்திய வங்க கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதி ,வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதி, ஒடிசா மேற்கு வங்க கடலோரப் பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே வங்கக்கடலின் வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா மாநிலம் சந்தபாலி அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூர், சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், காரைக்கால், நாகை, புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை ஏதும் விதிக்கப்படாததால் வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
புயல் சின்னமும் விளக்கமும்
புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவார்கள். இந்த எச்சரிக்கைச் சின்னங்கள் 1 முதல் 11 வரை உள்ளது.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள். இரண்டாம் எண் கூண்டு, புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது அர்த்தம்.
மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பெய்யும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்பதை குறிக்கும். ஐந்தாம் எண் கூண்டு, புயல் உருவாகி இருப்பதை குறிக்கிறது. அதோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். ஆறாம் எண் புயல் கூண்டு ஏற்றினால் புயல் வலதுபக்கமாக கரையைக் கடக்கும் போது, துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படுத்தப்படும் என்பதை குறிப்பதாகும்.
ஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். எட்டாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், மிகுந்த அபாயம் என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்.
ஒன்பதாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். 10ஆம் எண் கூண்டு ஏற்றப்படுமானால், அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கப்படுகிறது. துறைமுகத்தில் கடைசியாக ஏற்றப்படும் 11ஆம் எண் கூண்டு தான் உச்சபட்சமானது. இது எதற்கு ஏற்றப்படுகிறது என்றால் வானிலை மையத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.