சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி.. இனி பிஜி கட்டணம் ரூ.1,000 உயர்வு.. தமிழக பிஜி அசோசியேஷன் அறிவிப்பு!
சென்னை: வணிக சிலிண்டர் உயர்வு காரணமாக மே 5ஆம் தேதி முதல் தங்கும் விடுதிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 பேர் தங்கும் ஏசி அல்லாத அறைகளில் ரூ.6,500 முதல் ரூ.7,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், 3 பேர் தங்கும் வகையிலான அறைகளில் ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த பின் வணிக சிலிண்டர் விலை ரூ.990 அதிகரித்திருக்கிறது. மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று இந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டது. ஒரே நேரத்தில் வணிக சிலிண்டர் விலை ரூ.990 உயர்ந்திருப்பது சாமானிய மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஈரான் - அமெரிக்கா போரால் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே டீ கடை முதல் பெரிய உணவகங்கள் வரை உணவுகளின் விலை உயர்ந்தது. சாதாரணமாக ஒரு டீ விலை ரூ.12ல் இருந்து ரூ.15ஆக உயர்த்தப்பட்டது. ரூ.15க்கு விற்கப்பட்ட காபி விலை, ரூ.20 முதல் ரூ.25ஆக உயர்த்தப்பட்டது. சில உணவகங்களில் சிலிண்டர் அல்லாமல் மின்சார அடுப்பு கொண்டு உணவுகளை தயாரித்த போதும் கூட, விலையேற்றத்தை செய்தனர்.
இது சாமானிய மக்களை மிகப்பெரிய அளவில் பாதித்தது. தற்போது தேர்தல் முடிந்த 2 நாட்களில் வணிக சிலிண்டர் விலை ரூ.990 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் உணவகங்கள், விடுதிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக தங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்படுவதாக விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
அதாவது மே 5ஆம் தேதி முதல் விடுதிகளில் 4 பேர் வரை தங்கும் ஏசி அல்லாத அறைகளுக்கு ரூ.6,500 முதல் ரூ.7,500 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3 பேர் வரை தங்கும் வகையிலான அறைகளுக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், 2 பேர் தங்கும் வகையிலான நட்சத்திர அறைகளில் ரூ.8,000 முதல் ரூ.9,000 வடை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விறகு, மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதால், இந்த கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறைந்தபட்ச தொகை தான் என்றும், ஒரு சில விடுதிகளில் அவர்கள் கொடுக்கும் வசதிகளை பொறுத்து இந்த விலை மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை போன்ற நகரங்களில் படிக்கும் மாணவர்கள், மாணவிகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என்று பலரும் விடுதி உணவுகளை நம்பியே இருக்கின்றனர். இதனால் பிஜி-க்களிலும் கட்டணம் உயர்த்தப்படுவது நேரடியாகவே பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications