ஜெயலலிதாவும் டைட்டன் கைக்கடிகாரமும்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் சுவாரஸ்ய தகவல்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பரிசாக அளித்த கைக்கடிகாரம் குறித்தும் அதை எதற்காக அவர் பரிசளித்தார் என்பது குறித்தும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுவாரஸ்யமாக தகவல் அளித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவில் அனைத்து நண்பர்களுக்கும் அன்பு வணக்கம். 1991 ஆம் ஆண்டு ராயபுரம் தொகுதியின் வேட்பாளராக அறிவித்தவர் ஜெயலலிதா. பின்னர் என்னை வெற்றி பெறவும் செய்தார்.
அப்போது அவர் எனக்கு கொடுத்த அன்பு பரிசு நான் அணிந்திருக்கும் இந்த வாட்ச். இதை 1991 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அணிந்திருந்து அரும்பெரும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். கடிகாரத்தை பார், ஓடுவது முள் அல்ல. உன் வாழ்க்கை. போனால் திரும்பி வராதது காலமும் நேரமும்.

கைக் கடிகாரம்
Time is precious என்பதை அளிக்கும் வகையில் ஜெயலலிதா அளித்த கைக்கடிகாரத்தை அன்பு பொக்கிஷமாக ஏற்று பாதுகாத்து வருகிறேன் என்றார் ஜெயக்குமார். ஜெயலலிதா மறைந்தபிறகு பெரும் இன்னலுக்கு மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதா அமைத்து கொடுத்த ஆட்சியை தக்க வைத்து கொள்ள மூத்த நிர்வாகிகள் படாதபாடுபட்டனர்.

ஒலித்த அமைச்சர்
அந்த வகையில் அதிமுகவின் குரலாக பத்திரிகையாளர்களிடம் ஒலித்தவர் அமைச்சராக இருந்த டி ஜெயக்குமார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் யார் எத்தனை சர்ச்சையான கேள்வி கேட்டாலும் அதை மரியாதையுடன் அரசியல் பண்பாட்டுடன் பதில் அளிப்பதில் அவருக்கு நிகர் அவரே.

விளையாட்டு போட்டி
குத்துச் சண்டை போடுவது, புட்பால் விளையாட்டு, கிரிக்கெட் விளையாடுவது என எந்த விளையாட்டு போட்டிகள் தொடங்கினாலும் இவரும் கலந்து கொண்டு ஒரு ஆட்டம் போட்டுவிட்டுதான் அந்த இடத்தை விட்டு வருவார். விளையாட்டு மீது அதீத ஆர்வம் கொண்டவர். வெளிநாட்டில் புலியுடன் இவருடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாகின. பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜெயக்குமார் தனது வீட்டு முன் குவிந்திருக்கும் ஊடகங்களை இன்முகத்துடன் சந்தித்துவிட்டுதான் அடுத்த வேலையை பார்ப்பார்.

எந்த கேள்வியாக இருந்தாலும்
அதிமுகவுக்கு எதிரான கேள்வியாக இருந்தாலும் சரி அவர் தொடர்பான விமர்சனமாக இருந்தாலும் சரி நாகரீகத்தை தனது வார்த்தைகளிலும் செயல்பாட்டிலும் கடைப்பிடிப்பார். எத்தனையோ பேர் இவரை வைத்து மீம்ஸ் போட்டாலும் அதை பார்த்து ரசித்து சபாஷ் என சொல்லும் அளவுக்கு எல்லாவற்றையும் விளையாட்டுத்தனமாக எடுத்து கொள்பவர்.

தேர்வு செய்யப்பட்ட ஜெயக்குமார்
இவர் 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை ராயபுரம் தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2001, 2006, 2011, 2016 ஆம் ஆண்டுகளில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மீண்டும் 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். எனினும் 5 முறை ராயபுரத்தில் போட்டியிட்டு வென்று கிட்டதட்ட அதிமுகவின் கோட்டையாக ராயபுரத்தை வைத்திருந்த பங்கு இவரை சாரும். இவர் மீன்வளத்துறை, சட்டத்துறை, மின் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை நிதித் துறை, நிர்வாக சீர்திருத்த துறைகளின் அமைச்சராக பல்வேறு காலங்களில் பணியாற்றியவர்.

மூத்த தலைவர்
இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை குறுகிய காலத்தில் சபாநாயகராகவும் இருந்தார். மூத்த தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார். ராயபுரம் தொகுதியில் இவர் தோல்வி அடைந்தாலும் வீட்டில் உட்கார்ந்துவிடவில்லை. அன்றாடம் மக்கள் பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக் காட்டி வருகிறார். அதே வேளையில் தான் பிறந்து வளர்ந்த ராயபுரம் தொகுதி மக்கள் மீது எப்போதும் ஒரே மாதிரியான பாசத்தை பொழிந்து இணக்கமாகவே இருக்கிறார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications