"அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை".. 90% மா.செ.க்களின் விருப்பம்.. யார் அவர்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை எழுந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
அதிமுகவில் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு நீண்ட நாட்களாக ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க அதிமுகவை கைப்பற்ற சசிகலா ஒரு பக்கம் முயற்சித்து வருகிறார்.
மேலும் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பதிலாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூடுகிறது.

பொதுக் குழு
இந்த நிலையில் பொதுக்குழுவில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்த இன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு செல்போன் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.

மைத்ரேயன்
இதனால் மைத்ரேயன் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பாதியிலேயே சென்றுவிட்டார். இந்த நிலையில் இந்த கூட்டம் ஓபிஎஸ்- எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் போதே அலுவலகத்தின் வெளியே ஒற்றைத் தலைமை குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரின் ஆதரவாளர்கள் தனித்தனியே கோஷங்களை எழுப்பினர்.

ஜெயக்குமார் பேட்டி
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்தும் ஆலோசித்தோம். ஒற்றைத் தலைமை தேவை என்பதையே அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
ஒற்றைத் தலைமை யார் என்பதை அதிமுக முடிவு செய்யும். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்கிறார் என ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டத்திலும் ஒற்றை தலைமை கோஷம் எழுந்துள்ளது அடுத்தடுத்த திருப்பங்களுக்கு வித்திடும் வகையில் உள்ளது.












Click it and Unblock the Notifications