திணறடிக்கும் கொரோனா.. டெல்லியில் 50 %, மும்பையில் 70 % பாதிப்பு உயர்வு
இந்தியா ஓமிக்ரான் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் 50 சதவீதமும் மும்பையில் 70 சதவீதமும் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலை அடையச் செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஓமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது.
ஓமிக்ரான் பாதிப்பு- டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை- அமலுக்கு வரும் அதிரடி கட்டுப்பாடுகள்!
ஓமிக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
டெல்லியில் திடீரென அதிகரித்த பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. மட்டுமல்லாது ஒமிக்ரான் தொற்றும் புதிய அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பைவிட 50 சதவீதம் அதிகமாகும் அதிகமான எண்ணிக்கையாகும்.
142 பேர் ஓமிக்ரானால் பாதிப்பு
கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் டெல்லி இந்த அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. அதேபோல தினசரி பாதிப்பு விகிதம் கடந்த மே மாதத்திற்கு பின்னர் இன்று 0.89% ஆக பதிவாகியுள்ளது. நேற்று 331 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது கடந்த 6 மாதங்களில் பதிவான எண்ணிக்கையைவிட அதிகமாகும் என கூறியுள்ள சுகாதாரதுரை அதிகாரிகள், இதில் 142 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இரண்டாம் அலையை விட அதிகம்
டெல்லியில் கொரோனா இரண்டாம் அலையின்போது அதாவது கடந்த மார்ச் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட தொற்று பாதிப்பை காட்டிலும் தற்போது தொற்று பாதிப்பு 21 சதவீத அளவுக்கு வேகமாக பரவி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன எனவும், கடந்த ஒரு வாரத்தில் 59லிருந்து பாதிப்பு தற்போது 199ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளி, கல்லூரிகள் இதர கல்வி நிறுவனங்கள், சினிமா அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் கடும் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையிலும் கடும் பாதிப்பு
இதேபோல் இந்தியாவின் வர்த்தக தலைநகராக கருததப்படும் மும்பையிலும் கொரொனா பரவல் திடீர் எழுச்சியை பெற்றுள்ளது. மும்பையை பொறுத்த அளவில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு திடீரென 70 சதவீதம் அளவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1377 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும் மும்பை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.