பத்திக்கிட்டு எரியும் பச்சை பால் பாக்கெட் சர்ச்சை.. ஹார்வேர்ட் பல்கலை. ஆய்வுடன் வந்த ஆவின் அமைச்சர்
சென்னை: ஆவின் பச்சை பால் பாக்கெட் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் விமர்சித்து இருந்த நிலையில், அதற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்து உள்ளார்.
நேற்று அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் ஆகும்.

ஏற்கனவே 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச் சத்தே இருப்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில், தமிழ்நாடு பாஜக மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்தச் சோதனை அறிக்கையை அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம். இவ்வாறு கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடி கொண்டிருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.
மேலும், பாலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து விட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்து உள்ள பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "அண்ணாமலையின் கருத்து அரசியல் உள்நோக்கம் கொண்டது. தமிழ்நாடு அரசின் பெயர் மற்றும் ஆவின் நிறுவனம் மீது கலங்கம் கற்பிக்கும் வகையில் அவரது விமர்சனம் உள்ளது. தேவையற்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் இருக்கிறது." என்று குறிப்பிட்டு இருக்கிறார்." இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "மனோ தங்கராஜனின் இதுபோன்ற பதில்களால் ஊழல் திமுக அரசை மறைக்க முடியாது என பதிலளித்து இருந்தார்.
இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தற்போது வெளியிட்ட பதிவில், "ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆய்வின்படி ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான ஆரோக்கியம் இல்லை. அதனால்தான், ஆவினில் அதிக கொழுப்பு, நடுத்தர கொழுப்பு மற்றும் குறைந்த கொழுப்பு என நாங்கள் 3 வகையான பால் வழங்குகிறோம். ஏனென்றால், ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை தனித்தனியாக கவனிக்க வேண்டும்.
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப, உங்கள் குடும்பத்திற்கு ஏற்றதைத் தேர்ந்தெடுக்கவும். இது என்ன கிடைக்கிறதோ, அது பற்றியதல்ல. உங்கள் நல்வாழ்விற்கு ஏற்ற ஒரு தெளிவான முடிவை எடுங்கள். உங்கள் ஆரோக்கியம், உங்கள் முடிவு! தனிப்பயனாக்கப்பட்ட வயதுக்கு ஏற்ற ஊட்டச்சத்தை நாங்கள், ஆவினில் வழங்குகிறது. உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்கிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications