அண்ணே அங்க போகாதீங்க.. மீம்ஸ் போட்ருவாங்க! அமைச்சர் கே.என்.நேருவை எச்சரித்த தயாநிதிமாறன் எம்.பி.!
சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கே.என்.நேருவை எச்சரித்து அவரை மீம்ஸ் கிரியேட்டர்களிடம் இருந்து காப்பாற்றியிருக்கிறார் தயாநிதி மாறன் எம்.பி.
செல்ஃபி பாயிண்டை நோக்கி ஆர்வமாக சென்று கொண்டிருந்த அமைச்சர் நேரு, தயாநிதி மாறன் வேண்டாம் என்று சொல்லியவுடன் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் யு டர்ன் அடித்து தனது காருக்கு நடையை கட்டினார்.
இந்த நிகழ்வை நேரில் பார்த்த கட்சியினரும், அதிகாரிகளும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தனர்.
இது என்ன நியூயார்க்கா? சர்வதேச தரத்திற்கு மாறிய நுங்கம்பாக்கம் நடை மேம்பாலம்.. வாவ் செம மாற்றம்
மத்திய சென்னை
தயாநிதி மாறனின் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து செய்து முடிக்கப்பட்ட பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி சுரங்கப்பாதையை ஒட்டி அமைக்கப்பட்ட புதிய நடைபாதையை திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேருவிடம், அங்கு அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயிண்ட் பற்றி மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.
மீம்ஸ் போடுவார்கள்
இதைக் கேட்டதும் அதையும் ஒரு பார்வை பார்த்துவிடலாம் என்ற ஆவலில் அமைச்சர் கே.எ.நேரு செல்ஃபி பாயிண்டை நோக்கிச் சென்றார். இதை கவனித்த தயாநிதி மாறன் எம்.பி., ''அண்ணே அங்க போகாதீங்க, போட்டோவை போட்டு ஜோக்கு அடிப்பாங்க.. மீம்ஸ் கிரியேட் செய்திருவாங்க'' என பதறியபடி அமைச்சர் நேருவை எச்சரித்தார். தயாநிதி மாறன் இவ்வாறு சொன்னவுடன் அப்படியே யு டர்ன் அடித்து விறுவிறுவென தனது காருக்கு நடையை கட்டினார் அமைச்சர்.
சிரிப்பலை
செல்ஃபி எடுக்கத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறாரா என ஏற்கனவே ஒரு சிலர் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சித்து வரும் நிலையில், தேவையற்ற சர்ச்சையை தவிர்க்க நினைத்திருக்கிறார் தயாநிதி மாறன். இதனிடையே செல்ஃபி பாயிண்டை நோக்கி அமைச்சர் சென்றதும் அவரிடம் வேண்டாம் என தயாநிதி மாறன் தடை போட்டதும் அங்கிருந்த கட்சிக்காரர்கள், அதிகாரிகள் மத்தியில் சிரிப்பலையை எழுப்பியது.
கல்லூரி மாணவர்கள்
லயோலா கல்லூரி அருகில் இருப்பதால் கல்லூரி மாணவர்களுக்காக புதிய நடைபாதையில் செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் அதனை இன்று முதல் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் என்பது கூடுதல் தகவலாகும்.