பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்யாமல் இருக்கா? இதான் லாஸ்ட் சான்ஸ்! உடனே விண்ணப்பிங்க
சென்னை: சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின் வரும் டிசம்பர் 31- ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெயருடன் கூடிய சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் கால அவகாசம் கிடையாது எனவும் சென்னை மாநகரட்சி கூறியுள்ளது.
நமது நாட்டில் முக்கிய சேவைகள் அனைத்திற்குமே ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழ் உள்ளது. ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை உள்ளிட்டவைகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் அவசியம் தேவைப்படுகிறது. மேலும், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும்.

இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும். மிக முக்கிய ஆவணமாக பிறப்பு சான்றிதழ் மாறியிருக்கும் நிலையில், இந்த ஆவணத்தில், 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ குமரகுருபரன் கூறியிருப்பதாவது:-
பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான சான்று ஆகும். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியம். ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், அந்தக் குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு-இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்தவித கட்டணமும் இன்றி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு வருடத்திற்கு பின்னர் குழந்தையின் பெயரை பதிவு செய்திட வேண்டுமெனில் கால தாமத கட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகளின்படி, 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கு பதிவு செய்ய வசதி செய்யபப்பட்டுள்ளது. அதன்படி, 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை பெயர் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது.
அதன்பிறகு இந்த கால அளவு 2019-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. எனினும் மக்கள் பலரும் பெயரை பதிவு செய்ய சிரமப்பட்டதால், மேலும் ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் வரும் டிசம்பருடன் முடிவடைகிறது. எனவே, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிந்த பிறகும் பெயர் பதிவு செய்யவில்லை என்றால், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் பதிவு செய்யலாம்.
இதற்கு, பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்று பயன்பெறலாம். இனி வரும் காலங்களில் கால அவகாசம் நீட்டிப்பு வழங்கிட இயலாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் இதுவரை வாங்காமல் இருப்பவர்கள் உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications