"என்ன பேச்சு இது? ஏன் இப்படி?".. முதல் நாள் பிரஸ் மீட்டிலேயே சிக்கிய குஷ்பு.. கொந்தளித்த டிசம்பர் 3!
குஷ்புவின் கருத்துக்கு டிசம்பர் 3 இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது
சென்னை: பிளைட்டில் வந்து இறங்கிய முதல்நாளே குஷ்பு பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பி வருகிறது.. இது சம்பந்தமான விவாதங்களும் சோஷியல் மீடியாவில் ஆரம்பித்துள்ளன.
நேற்று டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் குஷ்பு இணைந்த நிலையில், இன்று சென்னை வந்தார். அப்போது அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, 'காங்கிரஸில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லையென்றால் அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும்? சிந்திக்கக் கூடிய மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்"என்று கடுமையாக விமர்சித்தார்.
குஷ்பு இவ்வாறு மனவளர்ச்சி குன்றியவர்களை இழிவுபடுத்தி பேசியதற்கு "டிசம்பர் 3 இயக்கம்" தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.. இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு டிசம்பர் 3 இயக்கத்தின் தீபக் அளித்த பேட்டியில் சொன்னதாவது:
ஒரு கட்சியை சார்ந்தவர்கள் இன்னொரு கட்சியை விமர்சிக்கலாம்.. அது தவறில்லை.. ஆனால், மூளை வளர்ச்சியின்மை தன்மையை பயன்படுத்தி குஷ்பு விமர்சித்துள்ளது தவறு.. அதை கடுமையாக எதிர்க்கிறோம்.. ஏனென்றால், பிறக்கும் 69 குழந்தைகளில் ஒரு குழந்தை மூளைவளர்ச்சி குறைவாக இருப்பது இயற்கை... அப்படி பிறக்கும் குழந்தைகள் எந்த வகையில் சிறுமை?
இயலாமை இயற்கையின் அங்கம்.. இதுக்காக அரசியல் எதிரியை விமர்சிப்பது முறையா? இயற்கையிலேயே ஆண்கள், பெண்கள் போலவே மாற்று திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் பிறக்கிறார்கள்.. அவர்களை கொண்டுபோய், உதாரணத்திற்கு பயன்படுத்துவதா? காங்கிரஸ் கட்சி இவருக்கு பிடிக்கவில்லையென்றால், மனவளர்ச்சி குன்றியவர்களுடன் ஒப்பிட கூடாது..
நாளைக்கு அந்த பிள்ளைகளுக்கே தெரியவந்தால், அவர்கள் எவ்வளவு வருத்தப்படுவார்கள்? இந்த பிள்ளைகளை பெற்ற தாய்மார்கள் எவ்வளவு பாடுபடுவார்கள்? நீங்களே பெரியாரை ஏத்துக்கறேன்னு சொல்றீங்க.. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகுன்னுதான் பெரியார் சொல்றார்? அதுவும் இல்லாமல் குஷ்பு பேசியது சட்டப்படி தப்பும்கூட.
இப்படித்தான் ஒருமுறை ராதாரவி மனவளர்ச்சி குன்றியவர்களை பற்றி பேசினார்.. இப்போ இவங்க பேசியிருக்காங்க.. இதுவா அரசியல் நாகரீகம்? அதனால் குஷ்பு தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்கணும்.. மாற்று திறனாளிகளுக்கு கட்சியையே கிண்டல் அடிச்சாலும் தவறுதான்.. ஒரு தனிநபரை கிண்டல் அடிச்சாலும் தவறுதான்.. அதனால் கண்டிப்பாக அவர் வருத்தம் சொல்லியே ஆக வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications