சிவில் இன்ஜினியரிங் படிக்க ஆர்வம் குறைவு.. பாடப்பிரிவை கைவிடும் கல்வி நிறுவனங்கள்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சிவில் இன்ஜினியரிங் படிக்க மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் சிவில் பாடப்பிரிவை பல கல்லூரிகள் சரண்டர் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மற்றும் பி.டெக் ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கு 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளன. ஜூன் 6ஆம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான காலம் நிறைவடைந்த நிலையில், மொத்தமாக 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஐடி துறையின் வளர்ச்சி
கடந்த சில ஆண்டுகளை விடவும் நடப்பாண்டில் மாணவர்கள் பலரும் பொறியியல் நோக்கி திரும்பி இருக்கின்றனர். இதற்கு ஐடி துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பொறியியல் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் இலக்கு ஐடி துறையாகவே இருக்கிறது. இதனால் அதனை நோக்கி மாணவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
பொறியியல் படிப்புகள்
இதனால் தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சிவில் பாடப்பிரிவை தேர்வு செய்வதில் மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால் பல தனியார் கல்லூரிகள் சிவில் பாடப்பிரிவை சரண்டர் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 433 கல்லூரிகளில், 2.33 லட்சம் பொறியியல் இடங்கள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டது.
சிவில் படிப்பில் ஆர்வம் குறைவு
ஆனால் அரசு நடத்திய கலந்தாய்வில் 1.20 லட்சம் இடங்கள் நிரம்பின. அதில் 29 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவிகித இடங்களும், 81 கல்லூரிகளில் 25 சதவிகித இடங்கள் கூட நிரப்பப்படவில்லை. அதிலும் சிவில் பாடப்பிடிவில் மாணவர்கள் சேர்வது மிகவும் குறைந்தது. கடந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக 4,451 மாணவர்கள் மட்டுமே சிவில் பாடப்பிரிவை தேர்வு செய்தனர்.
சரண்டர் செய்யும் கல்லூரிகள்
நிர்வாக ஒதுக்கீட்டில் சிவில் படிக்க விரும்புவோரின் எண்ணிக்கை இதனைவிடவும் குறைவாக இருந்துள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ், இசிஇ, இஇஇ போன்ற படிப்புகள் மூலமாக ஐடி துறையில் இணைய முடியும். ஆனால் சிவில் மூலமாக ஐடி துறைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் சிவில் பாடப்பிரிவை தேர்வு செய்ய ஆர்வம் காட்டாத நிலையில், முன்னணி கல்லூரிகள் கூட சிவில் பாடப்பிரிவை சரண்டர் செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளன.
டீன் கருத்து
இதுதொடர்பாக தனியார் கல்லூரியின் டீன் ஒருவர் பேசுகையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பாக 10 பாடப்பிரிவுகள் இருந்தாலும், அவற்றில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. இத்தனைக்கும் இந்த 2 பாடப்பிரிவுகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடவும் குறைந்த கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் இருக்கின்றன.
வேலைவாய்ப்புகள் குறைவு
ஆனாலும் மாணவர்கள் அந்த பாடப்பிரிவுகளில் சேர்வதற்கும் ஆர்வம் காட்டவில்லை. தனியார் கல்லூரிகள் பலரும் சிவில் பாடப்பிரிவை சரண்டர் செய்துவிட்டு, கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு கூடுதல் இடங்களுக்கான விண்ணப்பித்துள்ளன. ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில், சிவில் பாடப்பிரிவில் வேலைவாய்ப்புகள் குறைந்த அளவில் இருப்பதே காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications