சென்னையில் கோட்டை விட்ட திமுக.. முக்கிய காரணமே இதுதான்! கவனிக்காம விட்டது எப்படி?
சென்னை: கடந்த 1991 தேர்தலுக்கு பின்னர் சென்னையில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றது இதுதான் முதல் முறை. அப்படி என்ன நடந்தது சென்னையில்? ஏன் திமுக இந்த அளவுக்கு தோல்வி அடைந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் துறைமுகம் என இரண்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் அவர் தோல்வி அடைந்திருக்கிறார்.

என்ன நடந்தது சென்னையில்?
ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்பதை போலதான் சென்னை. தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை தெரிந்துக்கொள்ள வேண்டும் எனில், சென்னையில் எப்படி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்தாலே, மொத்த நிலைமையை தெரிந்துக்கொள்ளலாம்.
ஆனால் சென்னையில் பல விஷயங்களில் திமுக தவறு செய்திருக்கிறது என்பதை இந்த தேர்தல் தெரிவித்திருக்கிறது. முக்கியமாக உள்கட்டமைப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.
சட்டம் ஒழுங்கு
சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு, என்கவுன்ட்டர் போன்ற கடுமையான தண்டனைகள்தான் தீர்வு என பேசுவதெல்லாம் சினிமாதனம். உண்மையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்ய அரசு மெனக்கெட வேண்டும்.
இளைஞர்கள்தான் குற்றங்களில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். அவர்களை அதற்குள் தள்ளியது எது? வேலையின்மை, வேலை கிடைத்தாலும் அடிமாட்டு சம்பளம், வெளிநாடு முதலீடுகள் என்று அரசு பெருமையாக சொல்லிக்கொள்ளும் கம்பெனிகளில் தொழிலாளர்கள் மாடு மாதிரி வேலை வாங்கப்படுவது, வேலை இல்லையெனில் மொத்த வாழ்க்கையும் காணாமல் போய்விடும் அளவுக்கு உயர்ந்துள்ள விலைவாசி, குறிப்பாக கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடத்தப்படாதது, இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானங்கள் இல்லாதது இது எல்லாம் சங்கிலி போல, சட்டம் ஒழுங்கு பிரச்சனையுடன் பிணைந்திருக்கிறது.
புரிந்துக்கொள்ளாத அரசு
இதையெல்லாம் புரிந்துக்கொள்ளாமல், தொகுதிக்கு இவ்வளவு செய்திருக்கிறோம், அவ்வளவு செய்திருக்கிறோம் என்று பேசுவதெல்லாம் மக்களிடத்தில் எடுபடாது என்பதை இந்த தேர்தல் உணர்த்தியிருக்கிறது.
வில்லிவாக்கம் தொகுதியை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு போட்டியிட்ட தவெக ஆதவ் அர்ஜுனா, "எனது சொந்த செலவில் விளையாட்டு மைதானம் கட்டி தருவேன்" என்று கூறியிருக்கிறார்.
இளைஞர்களின் நலன்
அப்படியெனில் இதற்கு முன்னர் இருந்த திமுக எம்எல்ஏ ஏன் அதை செய்யவில்லை. இளைஞர்களின் வாக்கு முக்கியம் என்று நினைத்திருந்தால் இதை செய்திருக்க வேண்டும். வேலை, வேலையை விட்டு வந்தால் வீடு, மறுபடியும் வேலை என லூப்பில் சிக்கியிருக்கும் இளைஞர்களை ரிலாக்ஸ் செய்ய, அவர்களின் தனி திறனை ஊக்குவிக்க ஏன் முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
பெயரளவில் திட்டங்கள்
கேட்டால் நேரு ஸ்டேடியத்தை போய் பாருங்க.. எப்படி இருக்குன்னு தெரியும் என திமுகவினர் சமாளிப்பார்கள். வில்லிவாக்கத்தில் இருந்து தினமும் விளையாட நேரு ஸ்டேடியம் போக முடியுமா? வில்லிவாக்கத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அத்தனை பேரும் ஸ்டேடியம் போனால் இடம் இருக்குமா?
சென்னை மக்கள் கொந்தளிப்பு
சரி அப்படியே வேலை வாய்ப்பு பிரச்சனைக்கு வருவோம். உலகின் மிகச்சிறந்த நிறுவனங்களை நாங்கள் சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறோம். இந்த நிறுவனங்களால் இவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அந்த நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் மக்களுக்கு எவ்வளவு சம்பளம்? தொழிலாளர்களின் உரிமை பாதுகாக்கப்படுகிறதா? என ஏன் பேசுவதில்லை?
தொழிலாளர் நலன்
என்னதான் பெரிய நிறுவனமாக இருந்தாலும் ரூ.12,000 தான் அடிப்படை சம்பளம். சென்னையில் ஒரு வாரத்திற்கு கூட இது பத்தாது. ஆனால் இதை வைத்து மாதம் முழுவதும் வாழ வேண்டும் என சொல்லுவதெல்லாம் உச்சகட்ட கொடுமை. இதை பற்றி திமுக பேசாதது ஏன்? தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து வாய் திறக்காதது ஏன்?
இது போக உள்கட்டமைப்பு, தூய்மை பணியாளர்களின் போராட்டம், குடிசை மாற்று வாரியம் என்று சொல்லி பூர்வீக மக்களை அப்புறப்படுத்துவது இதெல்லாம் சென்னையில் திமுக காணாமல் போனதற்கு மிக முக்கியமான காரணமாகும்.












Click it and Unblock the Notifications