Tiruvannamalai deepam 2024: திருவண்ணாமலை 'பெஞ்சல்' பாதிப்புகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு!
சென்னை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வெள்ளம் பாதித்த இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும்; திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு எத்தனை லட்சம் பக்தர்கள் வருகை தந்தாலும் எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயாராக இருக்கிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். பெஞ்சல் புயல் கொட்டித் தீர்த்த பெருமழையால் திருவண்ணாமலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 13-ந் தேதி திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
வங்க கடலில் இலங்கை அருகே மையம் கொண்ட பெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்திவிட்டு கர்நாடகா வழியாக அரபிக் கடலுக்குள் சென்றுவிட்டது. பெஞ்சல் புயல் புதுச்சேரி- மரக்காணம் அருகே கரையைக் கடந்த நிலையிலும் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நகராமல் நிலை கொண்டு பெருமழையைக் கொட்டிவிட்டு சென்றிருக்கிறது.

வட மாவட்டங்களில் தென்பெண்ணையாற்றில் பெருவெள்ளம் கரைபுரண்டோடுகிறது; வட மாவட்டங்களில் சிற்றாறுகளிலும் வெள்ளம்; அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் முடங்கி இருக்கிறது.
திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் வரும் 13-ந் தேதி திருவண்ணாமலைதில் கார்த்திகை மாத மகா தீபத் திருவிழா நடைபெறுவது கேள்விக்குறியாகி இருக்கிறது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் புயல் பாதிப்புகள் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திருவண்ணாமலையில் தீபத் திருவிழா உற்சவம் தொடங்கிவிட்டது. நேற்றைக்கும் இன்றைக்கும் துர்க்கை அம்மன் வழிபாடு, பவானி அம்மன் வழிபாடு நடைபெற்றன. உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. கிரிவலப் பாதையில் பாதிப்புகளை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், பொதுப் பணித்துறை ஒருங்கிணைந்து செயல்படும். அடுத்த சில நாட்களில் தீப திருவிழா ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட இருக்கிறேன். ஏற்கனவே துணை முதல்வர் உள்ளிட்டோர் நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டுவிட்டனர். எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாலும் கடந்த ஆண்டைவிட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications