இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி?
சென்னை: தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இன்னமும் வேட்பாளர்களை தேர்வு செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இரு தேசிய கட்சிகளும் வேட்பாளர்களை அடையாளம் காணாமல் இருப்பது கட்சியினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள 17-வது சட்டசபைத் தேர்தல் நெருங்குகிறது. நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், பிரதான கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வில் வேட்பாளர் தேர்வு சிக்கல் நீடித்து வருகிறது.

ஆளும் திமுக 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து, அதில் 13 கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், பொன்னேரி, உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, சிவகாசி, நாங்குநேரி, குளச்சல், வேளச்சேரி, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கடலூர், சோளிங்கர், பென்னாகரம், உசிலம்பட்டி, மேலூர் உள்ளிட்ட 17 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு இழுபறி தொடர்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பட்டியல் அளித்தாலும், அகில இந்திய தலைமைதான் ஒப்புதல் வழங்க வேண்டும். கட்சியில் நிலவும் கோஷ்டி மோதல்களாலும், பணம் பெற்று வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக ராகுல் காந்திக்கு சென்ற புகாராலும், அவர் கடும் கோபத்தில் உள்ளதாலும் வேட்பாளர் தேர்வு சிக்கலாகி உள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோதும், விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அதிருப்தி நிலவுகிறது. முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் அல்லது சூலூர் தொகுதிகளை விரும்பிய நிலையில், அதிமுக அதை எடுத்துக் கொண்டதால் மொடக்குறிச்சியில் போட்டியிட வற்புறுத்தியபோதும் தேர்தலில் ஒதுங்கிக் கொண்டார் என சொல்லப்படுகிறது.
மேலும், ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் 5- ஐ மாற்றித் தருமாறு பாஜக மேலிடத் தலைவர்கள் அதிமுகவை வலியுறுத்துகின்றனர். அதிமுகவோ, ஏற்கனவே 165 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜகவின் கோரிக்கையால் தங்கள் வேட்பாளர்களும் இன்னும் மனு தாக்கல் செய்யவில்லை.
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6 கடைசி நாள், இடையில் 2 வேலை நாட்களே உள்ள நிலையில், தொகுதிகளை மாற்றி ஒதுக்க அதிமுகவுக்கு உள்ள நிர்பந்தம், சாத்தியமா என கேள்வியெழுப்புகிறது.
திமுக, அதிமுக கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வில் நீடிக்கும் இந்த வேட்பாளர் தேர்வு இழுபறி, தேர்தல் களத்தில் முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications