‛‛பீஸ் பீஸாக ஆக்கிவிடுவேன்’’.. பிரதமருக்கு மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் தாமோ அன்பரசன் மீது வழக்கு
சென்னை: பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக தமிழக அமைச்சர் தாமோ அன்பரசன் மீது டெல்லி போலீசார் 5 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் ஊரக தொழில்துறை அமைச்சராக இருப்பவர் தாமோ அன்பரன். இவர் சமீபத்தில் பிரதமர் மோடியை காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்த நிலையில் திமுகவை கடுமைாக விமர்சனம் செய்தார்.

அப்போது தமிழகத்தில் இருந்து திமுக விரைவில் காணாமல் போகும் என அவர் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் தாமோ அன்பரசன் மேடையில் பேசினார்.
அப்போது அவர், ‛‛எவ்வளவோ பிரதமரை நான் பார்த்துள்ளேன். ஆனால் இவ்வளவு மட்டமாக பேசிய பிரதமரை நான் பார்த்து இல்லை. ஒழிச்சிடுவேன் என்று சொல்கிறார். நான் ஒன்றை ஒன்றை சொல்லி கொள்கிறேன். திமுக என்பது சாதாரண இயக்கம் இல்லை. பல பேர் உயிர் தியாகம் செய்து வளர்ந்த இயக்கம். யார் யாரோ ஒழிஞ்சிவிடும் என கூறினார்கள். ஆனால் அவர்கள் தான் ஒழிந்துபோய்விட்டனர். இந்த இயக்கம் அப்படியே தான் உள்ளது. நான் அமைச்சர் என்பதால் அடக்கி வாசிக்கிறேன். இல்லாவிட்டால் பீஸ் பீஸாக ஆக்கிவிடுவேன்'' என பேசினார்.
தாமோ அன்பரசனின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான அதிருப்தி அதிகரித்து வருகிறது. இதனால் திமுக அமைச்சர்கள் பிரதமர் மோடிக்க மிரட்டல் விடுக்கும் செயலில் இறங்குகின்றனர். பிரித்தாளும் அரசியல், ஊழல்,சர்வதேச போதைப்பொருள் வியாபாரிகளுடனான தொடர்பு உள்ளிட்டவற்றால் திமுக விரைவில் அரசியலில் இருந்து வெளியேறிவிடும்'' என தெரிவித்து இருந்தார்.
மேலும் தாமோ அன்பரசன் பேசிய வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு அமைச்சர் தாமோ அன்பரசன் கொலை மிரட்டல் விடுத்ததாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சய்சய் ரஞ்சன் சார்பில் டெல்லி போலீசில் புகார் செய்தார். மேலும் அவர் பேசிய வீடியோவும் ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை தொடர்ந்து கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனால் அமைச்சர் தாமோ அன்பரசன் புதிய சிக்கலில் சிக்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications