சீமான் + அண்ணாமலை+ விஜய்..‘திராவிட கட்சிகளை’ வீழ்த்துமா 3 தமிழர் கூட்டணி? இலவு காத்த கிளியாக டெல்லி!
சென்னை: ஐந்து மாநில சட்டசபை தேர்தல் இன்னும் சில வாரங்களில் முடிவடையும் நிலையில் லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களில் டெல்லி பாஜக மேலிடம் படுதீவிரம் காட்ட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்தியில் ஆளும் பாஜக அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். என்னதான் 'எதிர்க்கட்சிகள்' ஒன்று திரண்டு 'இந்தியா' கூட்டணியை உருவாக்கி இருந்தாலும் பெரும்பாலான மாநிலங்களில் 'ஒர்க்' அவுட் ஆகுமா ? என்கிற கேள்வியை 5 மாநில தேர்தல்கள் கூட எழுப்பி இருக்கின்றன.

வட இந்தியாவும் பாஜகவும்: பாஜகவைப் பொறுத்தவரை வட இந்திய மாநிலங்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. பாஜகவுக்கு பெருவாரியான தொகுதிகளை அள்ளிக் கொடுக்க காத்திருக்கின்றன வட இந்திய தேர்தல் களம். ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகா தவிர இதர மாநிலங்களில் பாஜகவால் சொற்ப இடங்களைத்தான் பெற முடியும் என்கிற நிலைமை இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் மாநில கட்சிகள் அவ்வளவு வலிமையாக இருக்கின்றன. இந்த மாநில கட்சிகளை சிதைத்தால் மட்டுமே பாஜகவால் தென்னிந்தியாவில் வேர்பிடிக்க முடியும் என்பது கள யதார்த்தம்.
திமுக- அதிமுக வேறுபாடு: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆளும் திமுகவும் பிரதான எதிர்க்கட்சி அதிமுகவின் மிக மிக வலிமையான வாக்கு வங்கியை வைத்திருக்கின்றன. திமுக, அதிமுக வாக்கு சதவீதம் மிகவும் சொற்பமானவைதான். இந்த குறைவான வாக்கு வித்தியாசம்தான் இரு கட்சிகளையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்தி வருகின்றன. இந்த திராவிட கட்சிகளுக்கு மாற்றான முயற்சி தமிழ்நாட்டில் பல்வேறு கட்டங்களில், தேர்தல்களில் முன்னெடுக்கப்பட்டாலும் பெரிய அளவு அசைத்துப் பார்க்க முடியவில்லை என்பதும் உதாரணம். மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் திரண்டு மண்ணை கவ்விய வரலாற்றையும் தமிழ்நாடு பார்த்திருக்கிறது.
வலிமையான திமுக அணி: இத்தகைய பாடங்களால்தான் என்னவோ திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேற்றப்பட முடியாத அளவில் வலிமையாக ஒட்டிக் கொண்டு நிற்கின்றன. தொகுதிகள் எண்ணிக்கை ஒதுக்கீட்டில் அதிருப்தி, கேட்ட தொகுதிகள் கிடைக்காத அதிருப்தி என அக்கப்போர் ஆயிரம் இருந்தாலும் கூட திமுக கூட்டணியை விட்டு இப்போதைக்கு எந்த கட்சியும் வெளியேறுவதாக இல்லை. இத்தனைக்கும் பாஜகவை விட்டு அதிமுக வெளியேறிவிட்டதாக அறிவித்த பின்னரும் சலசலப்பு எதுவும் நிகழவில்லை. அதிமுக தலைமையில் தனித்த வலிமையான ஒரு கூட்டணி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே தற்போதைய நிலைமை உள்ளது.
தமிழக அரசியல் களம்: இன்னொரு பக்கம், திமுக - அதிமுகவுக்கு எதிரான களத்தில் பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் உள்ளன. பாஜகவை மிக கடுமையாக நாம் தமிழர் கட்சி விமர்சித்திருந்தாலும் பல்வேறு புள்ளிகளில் பாஜக, நாம் தமிழர் கட்சிகள் சங்கமித்துக் கொண்டே இருக்கின்றன. வரும் லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளைப் பெறும் என்பது பொதுவான கணிப்பு. அதேபோல பாஜகவுக்கும் சற்று கூடுதல் வாக்குகள் கிடைக்கலாம் என்பதும் ஒருவகையான எதிர்பார்ப்பு. இந்த கோதாவில் நடிகர் விஜய்யும் களமிறங்குவது உறுதியாகிக் கொண்டிருக்கிறது. பாமகவைப் பொறுத்தவரை திமுக அல்லது திமுக அணியில்தான் இணையக் கூடும். நடிகர் விஜய் கட்சிக்கு ஆட்சிக்கு எதிரான கொள்கைதான் பிரதானமாக இருக்கக் கூடும் அல்லது அரை நூற்றாண்டு திராவிட கட்சிகளுக்கு எதிரான நிலைப்பாடுதான் கொள்கையாக இருக்கலாம்.
நாம் தமிழர் + பாஜக+ நடிகர் விஜய்: அந்த அடிப்படையில் திராவிட கட்சிகளுக்கு எதிரான களத்தில் நாம் தமிழர் கட்சி, பாஜக மற்றும் நடிகர் விஜய் கட்சிகள் நிற்கின்றன. இந்த 3 கட்சிகளுமே தற்போதுவரை தனித்தே நிற்பதாக தெரிகிறது. ஆனால் 3 கட்சிகளையும் ஒருங்கிணைத்தால் திராவிடக் கட்சிகளை அசைக்க முடியும் என்பது டெல்லி பாஜக மேலிடத்தின் வியூகமாக இருக்கிறதாம். இந்த 3 கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டு வர முடியுமா? அப்படி கொண்டு வர முடியாவிட்டால் 'மறைமுக உடன்பாடு'களால் ஒருங்கிணைக்க முடியுமா? என்பதுதான் டெல்லியின் வியூகமாகவும் இருக்கிறதாம். இது தொடர்பாக சர்வேக்கள், கணிப்புகள் என்ற பெயரில் அடுத்தடுத்து தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டு பரபரப்புகள் கிளம்பும் என்கின்றன டெல்லி தகவல்கள். அதாவது சீமான், அண்ணாமல, நடிகர் விஜய் என்கிற மூன்று தமிழர்களை உள்ளடக்கிய 3 தமிழர் கூட்டணி, திராவிட கட்சிகளின் சகாப்தத்துக்கு சவாலாக இருக்காதா? என்கிற இலவு காத்த கிளியாக இருக்கிறதாம் டெல்லி.












Click it and Unblock the Notifications