பிளாக்மெயில் செய்வதா? தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.. ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: 'மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது' என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் ரூ.2,152 கோடி கல்வி நிதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு குற்றசாட்டை முன்வைத்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினும், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர். ஆனால் இன்னும் நிதி வழங்கப்படவில்லை.

தேசியக் கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டால்தான் நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
"தேசியக் கல்வி கொள்கையின்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்களது தாய்மொழி மற்றும் ஆங்கிலம், இதனைத் தொடர்ந்து 3-வது மொழியாக இந்தியையும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் தமிழ்நாடு மட்டும் இதனை ஏன் ஏற்க மறுக்கிறது?.. விதிகளின்படி 3-வது மொழியை ஏற்க வேண்டும். ஏற்க முடியாது என்று சொல்வது தவறு. அதனை ஏற்கும் வரை விதிகளின்படி, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க முடியாது.
தமிழ்நாடு ஏன் இதனை ஏற்க மறுக்கிறது என்றால், இதனை வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள். விதிகளை அவர்கள் ஏற்றுக்கொண்டால் நிதி வழங்கப்படும்" என்று கூறினார். கல்வி அமைச்சரின் இந்த கருத்துக்கு உடனடியாக தமிழகத்தில் ஆளும் திமுக எதிர்வினையாற்றியது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும் தர்மேந்திர பிரதானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
"They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications