நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: டெபாசிட் தொகை உயர்வு.. வேறு என்னென்ன கட்டுப்பாடுகள்?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிக்கு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் டெபாசிட் தொகை ரூ 4 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
தேர்தல் தேதி எப்போதும் வேண்டுமானாலும் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்ப மனுக்களை கட்சி தலைமை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தயார் நிலை
எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் தேர்தலுக்கான வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்களின் படி இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

நகராட்சி உறுப்பினர்
அதன்படி மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 காப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் போட்டியிட்டால் மேற்கூறிய தொகையில் பாதி செலுத்தினால் போதும்.

டிஜிட்டல் பேனர்கள்
வேட்பாளர் பெயரிலோ, கட்சிகள் பெயரிலோ மற்றும் அது தொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பர சுவரொட்டிகளோ டிஜிட்டல் பேனர்களோ கட் அவுட்களோ சுவரில் எழுதப்படுவதோ மாநிலத்தின் எந்த இடத்திலும் இருக்கவே கூடாது என அந்த கையேட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கைப்பேசி பயன்படுத்த தடை
அதே போல் இந்த முறை ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வாக்குச் சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications