உஷார்.. தெற்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. 4 நாட்களுக்கு இங்கெல்லாம் மழை இருக்கு
வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
சென்னை: வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில், உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுகிறது.. இதையடுத்து, 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.. கடந்த மார்ச் மாதமே வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்து விட்டது..
அப்போதே இந்த மே மாசம் எப்படி இருக்க போகிறதோ என்ற அச்சம் தமிழக மக்களை சூழ்ந்து கொண்டுவிட்டது.. அதற்கேற்றார்போல், ஏராளமான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி செல்ல ஆரம்பித்துவிட்டது.
ஒரு புறம் மண்டையை பிளக்கும் வெயில்! மறுபுறம் இதமான மழை.. எந்த மாவட்டங்களில் தெரியுமா
கொளுத்தும் வெயில்
தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல், அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்ட நிலையில் வெயிலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... இதன் காரணமாக பகல் நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களை தவிர வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வெப்பத்தை தணிக்க இளநீர், மோர் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்துவது நல்லது என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
கத்திரி வெயில்
தமிழகம், புதுச்சேரியில் நேற்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.. அதன்படி, வெயில் கொளுத்தி வருகிறது.. அதிலும்,வட மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.. அக்னி நட்சத்திரம் மே 28ம் தேதி வரை உள்ளதால், அதுவரை வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
அக்னி நட்சத்திரம்
கத்திரி வெயில் ஒருபக்கம் வாட்டி வந்தாலும், நல்ல செய்தி ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது.. ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் இதுகுறித்து சொல்லும்போது, "வங்கக் கடலில் தெற்கு அந்தமான் அருகே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது.. அது இன்றைய தினம், அதாவது 6ம்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும். இந்த பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மே 8ல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்..
சூறாவளி காற்று
இதனால், தெற்கு அந்தமானில் அடுத்த 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும். மத்திய கிழக்கு வங்க கடலில் மே 8 வரையிலும் மணிக்கு 75 கி.மீ., வேகம்வரை சூறாவளி காற்று வீசும். அதனால், குறிப்பிட்ட நாட்களுக்கு அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்நிலையில், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாவட்டங்கள்
அந்த அறிவிப்பில், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பதூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று அறிவித்துள்ளது.. இத்தனை நாளும் வெயிலின் கொடுமையில் தமிழக மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், இந்த ஜில் அறிவிப்பானது, பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.