வங்கக் கடலில் ஒன்று அரபிக்கடலில் மற்றொன்று... ஒரே நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு
அந்தமான் அருகே வங்கக் கடலிலும் மத்திய கிழக்கு அரபிக்கடலிலும் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஒரே நேரத்தில் அந்தமான் அருகே வங்கக்கடலில் நாளையும், மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதியும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதில் அந்தமான் அருகே உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. நவம்பர் மாதம் முதலே மழை தீவிரமடைந்தது. அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுநிலைகள், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழத்தின் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்து பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் , கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது. அத்தியாவசியப்பொருட்களைக் கூட வாங்க வர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
இதை மட்டும் செய்யாதீங்க.. இயற்கை நியதிக்கு முரணானது.. தமிழக அரசை அலர்ட் செய்யும் ஓ.பி.எஸ்!
காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் பல மாவட்டங்களில் விடாமல் மழை கொட்டி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கழுத்தளவு தண்ணீரில் மக்கள் தத்தளித்து வரும் நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு அந்தமானில் அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம்
அந்தமான் அருகே உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு -வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
டிசம்பர் 1ல் காற்றழுத்தம்
இதனிடையே மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒரே நேரத்தில் வங்கக் கடல், அரபிக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலையில் மீண்டும் ஒரு பெருமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராகி வருகிறது.
எங்கெங்கு மழை
இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி. கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டடுள்ளது. மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.