ஓ.பன்னீர்செல்வம் பணிவது முதல்முறை அல்ல... இது மூன்றாவது முறை... அரசியல் பிளாஷ்பேக் ரீவைன்ட்..!
சென்னை: அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பத்திற்கு இன்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த முயன்று அதற்கான முயற்சிகள் கைகூடாததால் எடப்பாடி பழனிசாமி பெயரை முன்மொழிந்து அறிவித்திருக்கிறார் ஓ.பி.எஸ்.
இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் கடந்த கால அரசியல் பாதை பற்றி இங்கே பார்க்கலாம்.

பெரியகுளம் நகரம்
தேனி மாவட்டம் உத்தமப்பாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்த பன்னீர்செல்வம் பால் பண்ணை ஒன்றை தொடங்கினார். அதில் அவர் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபமும், வருமானமும் கிடைத்ததால் சொந்தமாக தேநீர் கடையையும் நடத்த தொடங்கினார். குடும்பம் நடத்த தேவையான வருமானத்துக்கு குறைவில்லை என்பதால் ஓ.பன்னீர்செல்வத்தின் கவனம் அரசியல் பக்கம் திரும்பியது. அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டும் இருந்த பன்னீர்செல்வம், கம்பம் செல்வந்திரேன் (இவர் இப்போது திமுக இருக்கிறார், எம்.ஜி.ஆர்.காலத்தில் அதிமுகவில் முக்கியப்பிரமுகராக வலம்வந்தவர்) மூலம் பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆனார்.

ஜானகி அணி
1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஜெயலலிதா அணி - ஜானகி அணி என இரண்டு பிரிவுகள் உருவாகின. அதில் ஜானகி அணி பக்கம் நின்றார் ஓ.பி.எஸ். 1989 சட்டமன்றத் தேர்தலின் போது போடி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவை எதிர்த்து ஜானகி அணி சார்பில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா களமிறக்கப்பட்டார். அப்போது ஜெயலலிதாவை தேர்தலில் வீழ்த்தி வெண்ணிற ஆடை நிர்மலாவை வெற்றிபெற வைக்க தேர்தல் பணியாற்றினார் ஓ.பி.எஸ். ஆனால் அந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் ஜெயலலிதா.

பணிந்தார் ஓ.பி.எஸ்.
பிற்காலத்தில் ஜெயலலிதா தலைமையை ஏற்ற ஓ.பி.எஸ். பெரியகுளம் நகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு நகர்மன்ற தலைவராக வெற்றிபெற்றார். அதன் மூலம் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்த அவருக்கு காலம் தந்த கொடையாக உச்சபட்ச பதவிகள் அனைத்தும் கிடைத்தன. இந்நிலையில் 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தர்மயுத்தம் நடத்தி தனி அணியாக செயல்பட்டு வந்த ஓ.பி.எஸ்., முதலமைச்சர் இ.பி.எஸ். தலைமையில் நடைபெற்ற ஆட்சியை விமர்சிக்காத நாட்களே இல்லை. ஊர் ஊராக பொதுக்கூட்டங்கள் போட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை வசைபாடினார்.

2-வது முறை பணிந்தார்
எந்த அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தாரோ, எந்த ஆட்சியை பற்றி தூற்றினாரோ அதே ஆட்சியில், அரசாங்கத்தில் துணை முதலமைச்சராக பதவியேற்று மீண்டும் சரண்டராகினார். இது நடந்தது 2017-ம் ஆண்டு. இப்போது மீண்டும் அதேபோன்று ஒரு நிகழ்வு தான் இன்று நடந்துள்ளது. கடந்த 28-ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதம் செயற்குழுவில் எழுந்தபோது முடிந்தால் மோதிப்பார் என்பது போல் கர்ஜித்துவிட்டு சென்றார் ஓ.பி.எஸ்.

விட்டுக்கொடுப்பு
இந்த 10 நாட்களுக்குள் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் சமாதான முயற்சிகள் மூலம், மூன்றாவது முறையாக அரசியலில் சமாதானத்தை குறிக்கும் வெள்ளைக்கொடி காட்டியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதுவும் வெற்றி வேட்பாளர் என ஓ.பி.எஸ். குறிப்பிட்டு அறிவித்துள்ளார். இதனிடையே விட்டுக்கொடுப்பார் கெட்டுப்போவதில்லை என்ற பழமொழியை நினைவூட்டுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications