"மக்களுக்காக துணை நிற்போம் என முதலில் நம்பிக்கையை ஏற்படுத்துங்க”.. துணை முதல்வர் உதயநிதி அட்வைஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அரசு அதிகாரிகள் எப்போதும் மக்களுடன் துணை நிற்கின்றனர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், 4வது வாரத்தில் மழை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு மழைப் பொழிவு இருக்கும் எனவும், வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வட தமிழகத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென் தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. எனவே இந்த ஆண்டு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு, மண்டலம் வாரியாக மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் விளக்கம் அளித்தனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு பெய்த அதிக கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைவில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மரம் வெட்டும் உபகரணங்களை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வார்டுகளிலும் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வாட்ஸ்ஆப் குழு உருவாக்க வேண்டும்.
மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மின் பெட்டிகளை உயர்த்தி வைக்க வேண்டும்.
மீட்பு பணிகளுக்கு தன்னார்வலர்களைப் பயம்படுத்த வேண்டும், தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில் வாட்ஸ் அப் குழுக்களை அமைக்க வேண்டும், அரசு அதிகாரிகள் எப்போதும் மக்களுடன் துணை நிற்கின்றனர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுரை வழங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications