தமிழகம் முழுவதும் கோவில் புறம்போக்கு நிலங்கள்.. அதிரடி உத்தரவிட்ட ஹைகோர்ட்
சென்னை: தமிழகம் முழுவதும் கோவில் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் உலிபுரத்தில் உள்ள அருள்மிகு கம்பராய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 3.88 ஏக்கர் நிலத்தை, ஆனந்தன் என்பவர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை, சேலம் மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி, சேலத்தை சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் எஸ்.கண்ணம்மாள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 2015ம் ஆண்டு மே 25ம் தேதியே கோவில் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்களின் விவரங்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படி மேட்டூர் துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், இதுவரை அவர்கள் அறிக்கை அளிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் வட்ட வாரியாக கோவில் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications