அய்யோ..ஐஸ்கிரீமில் சோப்பு தூளா? ஷாக் ஆகி போன அதிகாரிகள்! தர்ப்பூசணி பஞ்சாயத்தே இப்போ தான் முடிஞ்சது!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தர்பூசணி, ஆப்பிள் ஆகியவற்றில் இரசாயன கலப்பு இருப்பதாக வெளியான தகவலால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அது புரளி என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோடைக் காலத்தில் அதிர்ச்சி தரும் விதமாக பெங்களூரில் ஐஸ்கீரிம் ஆலைகள், கடைகளில் நடத்திய சோதனையில், ஐஸ்க்ரீம்களில் சோப்பு தூள் மற்றும் எலும்பை பாதிக்கும் ரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழகத்திலும் சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெயில் காலம் துவங்கி விட்ட நிலையில் மக்கள் குளிர்பானங்கள் பழங்கள் ஆகியவற்றை நாடத் தொடங்கியுள்ளனர். இதனால் சாலையோரங்களில் தர்பூசணி, கரும்பு ஜூஸ், மோர் உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.

வெயில் நேரங்களில் பயணம் செய்பவர்கள் ஐஸ்க்ரீம், கரும்பு ஜூஸ், தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள் என்பதால் சாலையோரங்களில் அவற்றின் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் மொத்தமாக தர்பூசணி பழங்களை வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு சில வியாபாரிகள் தர்பூசணி பழங்களின் ரசாயனங்களை ஊசி மூலம் செலுத்தி செயற்கையாக இனிப்பு மற்றும் சிவப்பு நிறத்தை ஊட்டி மக்களுக்கு விற்பனை செய்வதாக திடீரென தகவல் பரவியது. இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தர்பூசணி பழங்களை கிலோ கணக்கில் பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர்.
இந்த நிலையில் தர்பூசணி பழங்களின் விற்பனையும் கடுமையாக சரிந்தது. இதற்கிடையே தர்பூசணி பழத்தின் விற்பனை குறித்து அவதூறு பரப்பப்படுவதாகவும், தர்பூசணி பழங்களின் விற்பனையை சீர்குலைத்து குளிர்பானங்களை குடிக்க வைக்கவே இந்த வதந்தி பரப்பப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து இது குறித்து பேசிய சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பான உற்பத்தி நிறுவனங்களில் தரமற்ற கலப்படம் உள்ள ஐஸ் கிரீம், குளிர்பானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த ஆலைகளில் திடீர் சோதனை நடத்தினர். அதில் ஐஸ்கிரீமில் க்ரீமை கிரீமியாக காட்டுவதற்காக சோப்புத்தூளை கலந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் குளிர்பானங்களில் அதிக அளவு நுரை வருவதை அதிகரிப்பதற்காக பாஸ்போரிக் அமிலம் கலக்கப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அமிலம் எலும்புகளின் வலிமையை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில உற்பத்தியாளர்கள் டிடர்ஜென்ட், யூரியா, ஸ்டார்ச் கொண்டு செயற்கையாக பாலை தயாரித்து ஐஸ்கிரீம் தயாரித்ததும் தெரிய வந்தது. மேலும் சர்க்கரைக்கு பதிலாக சாக்கரின், அனுமதி இல்லாத நிறமூட்டிகள், சுவை கொடுக்கும் வேதிப்பொருட்களை கலக்கப்பட்டு இருப்பதும் கண்டறிந்துள்ளது. மேலும் பல இடங்களில் குடிக்கவே தகுதி இல்லாத தூய்மையற்ற குடிநீரை பயன்படுத்தி ஐஸ்கட்டி மற்றும் குளிர்பானங்கள் தயாரிப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தரமற்ற முறையில் ஐஸ்கிரீம் தயாரித்த நிறுவனங்களுக்கு 38 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கேரள மாநிலத்திலும் இதேபோல சுகாதார மற்றும் முறையில் ஐஸ்கிரீம் தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் சுகாதாரமற்ற வகையில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பெட்டிக்கடைகள் முதல் பெரிய கடைகள் வரை ஐஸ்கிரீம் குளிர்பானங்கள் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்த இருக்கிறார்கள் அதிகாரிகள்.
கலப்படம் கண்டறியப்பட்டால் அந்தந்த நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர். வெயில் காலத்தில் வேதனையை கிளப்புவது போல ஐஸ்கிரீம்களிலும் கலப்படம் இருப்பதாக புலம்புகின்றனர் பொதுமக்கள்.












Click it and Unblock the Notifications