சிவகங்கை வேட்பாளர்களிலேயே அதிக சொத்து மதிப்பு தேவநாதன் யாதவுக்குத்தான்.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணி கட்சி வேட்பாளரான தேவநாதன் யாதவ் மற்ற வேட்பாளர்களை காட்டிலும் அதிக சொத்து மதிப்புகளை கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது. முதலில் தபால் வாக்குகளும் பிறகு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கலானது கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. நாளை வேட்புமனு தாக்கல் முடிகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் பங்குனி உத்திரம் என்பதால் பல வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
அந்த வகையில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியான இந்திய மக்கள் கல்வி கழகத்தின் வேட்பாளர் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். அவர் நேற்றைய தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். அப்போது சிவகங்கை மாவட்டத்தில் தாக்கல் செய்தவர்களிலேயே அதிக சொத்து மதிப்பு உள்ளவர் தேவநாதன்தான்.
வேட்புமனுவில் தனது பெயரிலும் மனைவி பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை உறுதிமொழி பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் தனது பெயரிலும் தனது மனைவி, குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்து விவரங்களில் தனது பெயரில் ரூ 6.86 கோடி சொத்தும், மனைவி பெயரில் 2.23 கோடி சொத்தும், மகள்கள் பெயரில் ரூ 7.29 கோடி சொத்தும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அது போல் விவசாய நிலம், விவசாயம் அல்லாத நிலம், கட்டடங்கள், வீடு உள்ளிட்ட அசையா சொத்துகள் எனற வகையில் தனது பெயரில் ரூ 8 கோடி , மனைவி பெயரில் 5.80 கோடி, மகள்கள் பெயரில் தலா ரூ 2 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த தேவநாதன் யாதவ் (62) எம்ஏ, பிஎச்டி முடித்துள்ளார்.
இவர் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தில் தலைவர். பல்வேறு விளையாட்டு அமைப்புகளிலும் பொறுப்பாளராக உள்ளார். இவருக்கு மனைவி மீனாட்சி, இருமகள்கள் உள்ளனர். வின் தொலைகாட்சி சேனலை நடத்தி வருகிறார். கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications