துப்பாக்கி எடுத்துட்டு போங்க.. தற்காப்புக்கு சுடுங்க.. போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
சென்னை: ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் கைத்துப்பாக்கிகள் எடுத்துச் செல்லலாம் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்பட்ட நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர் பூமிநாதன். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பூலாங்குடி காலனி என்ற இடத்தில் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஆடுகளை எடுத்துச் செல்வதை பார்த்து அவர்களை நிறுத்த முயன்றார்.
ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றதால் பூமிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் அவர்களை விரட்டிச் சென்றார்.
பெருந்துறை: கால்வாயில் குளித்த தலித் மாணவர்கள் மீது தாக்குதல்- அரை நிர்வாணமாக்கி உதைத்த கொடூரம்!
அரிவாள் வெட்டு
கீரனூர், பள்ளப்பட்டி பகுதியில் மூவரும் இருந்த இரு சக்கர வாகனத்தை வழிமறித்து பூமிநாதன் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது 19 வயது மணிகண்டன் என்பவர் தன்னுடன் இருந்த இரண்டு சிறுவர்கள் உதவியோடு அரிவாளால் வெட்டி விட்டு தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
குற்றவாளிகள் கைது
இந்த சம்பவத்தில், பூமிநாதன் பலியானார். இதைத் தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மணிகண்டன் மற்றும் இரண்டு சிறுவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பூமிநாதன் குடும்பத்தினரை இன்று காலை தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது பூமிநாதன் உருவப்படத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தற்காப்புக்கு பயன்படுத்துங்கள்
பின்னர் நிருபர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, ரோந்து பணிக்கு செல்லும் போது போலீசார் துப்பாக்கியை எடுத்து செல்ல பரிந்துரைத்துக்கப்பட்டுள்ளோம். தற்காப்புக்காக ஆயுதத்தை பயன்படுத்தலாம் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கி இருக்கிறோம்.
15 கி.மீ விரட்டிச் சென்றார்
கொள்ளையர்களை 15 கிலோமீட்டர் தூரத்திற்கு பூமிநாதன் விரட்டி சென்றுள்ளார். பிறகு ஆடு திருடர்களின் தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுரை கூறிக்கொண்டு இருந்துள்ளார். அப்போதுதான் அந்தக் கொலை நடைபெற்றுள்ளது. பூமிநாதனின் குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி ரூபாய் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.