"பத்து தல"! நரிக்குறவர்களை அனுமதிக்காத ரோகிணி தியேட்டர்.. தீண்டாமை கொடுமையை கண்டித்த திமுக எம்பி
சென்னை: சென்னை ரோகிணி திரையரங்கில் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்த நரிக்குறவர்களை அனுமதிக்காமல் தீண்டாமை கொடுமையில் ஈடுபட்ட ஊழியர் மீதும் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க தருமபுரி எம்பி செந்தில் குமார் ட்வீட் போட்டுள்ளார்.
நடிகர் சிம்பு, கவுதம் கார்த்திக், கலையரசன் நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பத்து தல. இந்த படம் சிம்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு இந்த படம் டிசம்பர் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பத்து தல படம் வெளியானது. படம் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகம் ஏற்பட்டு வருகிறது. இந்த தீண்டாமை சம்பவத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் வெளியான படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் பத்து தல படத்தை பார்க்க நரிக்குறவ பெண்கள் இருவர் உள்பட 5 பேர் வந்திருந்தனர். அதில் ஒரு குழந்தையும் இருந்தது. அவர் உரிய டிக்கெட் பெற்றிருந்தார். அப்போது அவரை உள்ளே அனுப்ப தியேட்டர் ஊழியர் மறுத்தார்.

நரிக்குறவ பெண்கள்
அந்த நரிக்குறவ பெண் தன்னிடம் டிக்கெட் இருந்தும் ஏன் உள்ளே விடமாட்டீங்கிறீங்க என வாதம் செய்தார். ஆனாலும் அந்த ஊழியர் அந்த பெண்ணை மனிதராக கூட பார்க்காமல் கை சைகையை காட்டி வெளியேறுமாறு கூறினார். இதை பார்த்த சிம்பு ரசிகர்களும் "ஏண்ணா, அவங்கதான் டிக்கெட் வச்சிருக்காங்களே உள்ளே விடுங்க" என்றனர்.

ஊழியர் கேட்கவில்லை
அதையுடம் அந்த ஊழியர் கேட்கவே இல்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரோகிணி திரையரங்க உரிமையாளர் பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். அதில் நரிக்குறவர்கள் என்பதால் அனுமதி மறுக்கப்படவில்லை. யூஏ சான்றிதழ் படங்களுக்கு சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது என்பதால் அந்த படத்திற்கு அவர்களை அனுமதிக்கவில்லை என கூறியிருந்தார்.

திமுக எம்பி கண்டனம்
இந்த நிலையில் இதுகுறித்து தருமபுரி எம்பி செந்தில் குமாரும் இந்த தீண்டாமை கொடுமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது : ரோகிணி திரையரங்கில் பணம் குடுத்து டிக்கெட் வாங்கிய நபர்களை படம் பார்க்க அனுமதிக்காமல் #தீண்டாமை_கொடுமையில் ஈடுபட்ட ஊழியர் மீது நடவடிக்கை தேவை. SOP-நிலையான செயல்பாட்டு நெறிமுறை மூலம் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு சொல்லி கொடுக்க தவறிய உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

10 டிக்கெட்டுகள்
இதுகுறித்து நரிக்குறவர்கள் கூறுகையில், எங்களுக்கு சிம்புவின் ரசிகர்கள்தான் 10 டிக்கெட்டுகளை இலவசமாக கொடுத்தனர். இதையடுத்து நாங்கள் உள்ளே சென்ற போது இந்த பக்கம் எல்லாம் நீங்கள் வரக் கூடாது என ஊழியர் தெரிவித்தார். எங்களை அவருக்கு பிடிக்கலை போல! இதே போல் ஏற்கெனவே விஜய் படத்திற்கும் எங்களிடம் டிக்கெட் இருந்தும் உள்ளே விடவில்லை. பின்னர் மேனேஜர் நாங்கள் வெளியே நிற்பதை பார்த்துவிட்டு எங்களை உள்ளே அழைத்து சென்றார். எங்கள் குழந்தைகளுக்கு பாப்கார்ன்லாம் வாங்கி தந்தார் என்றார் அந்த பெண்












Click it and Unblock the Notifications