பிரதமரை கிண்டல் செய்த காமெடி வீடியோ நீக்கம்.. முடங்கி மீண்ட திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டர்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு விஷயத்தை கிண்டல் செய்து தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி நடத்திய வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்தமைக்காக எனது கணக்கு முடக்கப்பட்டு பின்னர் ட்வீட் நீக்கப்பட்டதாக திமுக எம்பி செந்தில்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 15-ஆம் தேதி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி தனியார் தொலைகாட்சி சேனலில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், அவரின் ஆடைகள், தனியார்மயமாக்குதல் கொள்கை உள்ளிட்டவற்றை விமர்சித்து சிறுவர்கள் பேசி நடித்தனர்.

வைரல்
இந்த நிகழ்ச்சி வைரலானது. இந்த வீடியோ கிளிப்பிங்கை போட்டு டிவிட்டரில் பிரதமர் மோடியை நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர். இதையடுத்து பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி நடத்திய தனியார் தமிழ் சேனலுக்கு மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தருமபுரி திமுக எம்பி
இந்த வீடியோவை சிரித்து சிந்தித்து மகிழ என்ற தலைப்பில் தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான கிரெடிட்டையும் அவர் கொடுத்தார். இந்த நிலையில் திமுக எம்பி செந்தில் குமாரின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரத்திற்கு முடக்கப்பட்டதாக கூறுகிறார்.

காப்பிரைட் விவகாரம்
மேலும் அவரது பிரதமர் குறித்து வெளியிட்டிருந்த அந்த ட்வீட்டும் காப்பிரைட் விவகாரத்தால் நீக்கப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ட்விட்டரில் வெளியிட்ட திமுக எம்பி செந்தில் குமார் கூறுகையில், தமிழக பாஜக நிர்வாகிகளை நினைத்தால் மிகவும் அச்சமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது.

திமுக எம்பி செந்தில்குமார்
குழந்தைகள் நடத்திய காமெடி நிகழ்ச்சியை எனது ட்விட்டரில் பதிவிட்டதற்கு காப்பிரைட் பிரச்சினையை கிளப்பி ட்விட்டருக்கு கூறி எனது ட்விட்டர் கணக்கை முடக்கினர். வாருங்கள், நமது கொள்ளைகள், வளர்ச்சி திட்டங்கள், கோட்பாடுகளை கொண்டு அவர்களை எதிர்த்து போராடி தக்க பதிலடி கொடுக்கலாம் என திமுக எம்பி செந்தில் குமார் அழைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications