"ஆக்ஷன் எடுப்பேன்".. அன்றே சொன்ன நீதிபதி.. சட்டத்திற்கு புறம்பாக கூடியதா அதிமுக பொதுக் குழு?
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழுவில் சட்ட விதிமீறல் இருந்தால் ஆக்ஷன் எடுப்பேன் என நீதிபதி ஜெயசந்திரன் அன்றே கூறியிருந்த நிலையில் இன்றைய தினம் வெளியான தீர்ப்பை பார்த்தால் அதிமுக பொதுக் குழு சட்டத்திற்கு புறம்பாக கூட்டப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.
அதிமுக பொதுக் குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்டது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த பொதுக் குழு கூட்டம் அதிமுக விதிகளின்படி நடைபெறவில்லை என ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தை நாடினார். இதில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றன.

பொதுக் குழு
அதில் ஓபிஎஸ் தரப்பு ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிரந்தர அவைத் தலைவரென அறிவிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர் அல்ல. இரு பதவிகளும் காலியாகிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் அவைத் தலைவரை நிரந்தரமாக நியமிப்பதற்கு முன்மொழிந்தபோது இணை ஒருங்கிணைப்பாளர் என்றே எடப்பாடி பழனிசாமியை அழைத்ததற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன.

அடிப்படை உறுப்பினர்
அதிமுகவில் மட்டும் தான் எந்த அடிப்படை உறுப்பினர் வேண்டுமானாலும் தலைவராக முடியும் என்ற விதி இருந்தது. ஆனால் 5 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருந்திருந்தால் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற விதியில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு விதிகளுக்கு புறம்பாக நடத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

பொதுக் குழு
அதிமுக பொதுக் குழுவில் விதிகள் மீறப்படவில்லை என எடப்பாடி தரப்பு தங்கள் தரப்பு நியாயத்தை தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் விதிகள் மீறப்பட்டிருந்தால் ஆக்ஷன் எடுப்பேன் என எச்சரித்திருந்தார்.

தீர்ப்பு சொல்வது என்ன?
இந்த நிலையில் இன்று அதிமுக பொதுக் குழு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொது குழு செல்லாது. ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் எந்த நிலை இருந்ததோ அதே நிலைதான் நீடிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே அதிமுக பொதுக் குழு கட்சியின் சட்டவிதிகளுக்கு எதிராக நடந்ததாகவே இந்த தீர்ப்பு பார்க்கப்படுவதாக கூறும் ஓபிஎஸ் தரப்பினர் , மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications