விகே பாண்டியன் யார் தெரியுமா? தமிழர்களை அவமதித்தாரா மோடி.. முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி
சென்னை: தமிழர்களை பிரதமர் நரேந்திர மோடி அவமதித்து விட்டதாக வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியோ மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தொலைந்து போன பூரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூல அறை சாவி தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை மறைமுகமாக விமர்சித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சு, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் பூரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதித்து புண்படுத்தும் செயல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களை, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி இருப்பதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா.. தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா?
தமிழ்நாட்டிற்கு வரும் போது, தமிழையும், தமிழர்களையும் உயர்வாக போற்றி பேசும் பிரதமர் மோடி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது, தமிழ்நாட்டு மக்களை திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்!
முன்னதாக, உத்தரப் பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார் பிரதமர் மோடி. மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடும் செயல் ஆபத்தானது என்று எனது கண்டனத்தை அப்போதே தெரிவித்து இருந்தேன்.
சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய அரசியல் தலைவரே பகையுணர்வைத் தூண்டுவது தவறு என்றும் கூறியிருந்தேன். ஆனாலும் தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ளவில்லை.
தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை - கோட்பாடுகள் - செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் - மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு குறித்து வீடியோவை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.
வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்!" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்திற்குள்ளும், வெளியிலும் நடக்கும் சம்பவங்கள் குறித்து எதுவுமே அறியாமல், நிலைய வித்வான்கள் சூழ்ந்த குழிக்குள்ளே வசிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஒடிசாவில் பிரச்சாரத்தின் போது பேசியதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது துரதிர்ஷ்டவசமானது.
மக்களை இனம், மதம், மொழி மற்றும் சாதியின் பெயரால் பிளவுபடுத்துவதில், திமுக நிபுணத்துவம் வாய்ந்தது என்பதையும், அந்தப் பிரிவினையை ஒதுக்கி வைப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்பதையும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள், பொய் சொல்வதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் பேசிய பொய்களை பக்கத்தை வைத்து அடுக்கினால் அதை நிரப்ப முடியாது.. இன்று அவர் பேசியுள்ள மற்றும் ஒரு பொய் என்னவென்றால், ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை அவமதித்து பிரதமர் மோடி பேசிவிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்ன?அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் அந்தந்த மாநிலத்தின் முதல்வராக வர வேண்டும். விகே பாண்டியன் என்பவர் 12 வருடங்களாக ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக்கின் தனி செயலாளராக இருந்தவர்.
இப்போது அவர் தான் நவீன் பட்நாயக்கின் முகமாக இருக்கிறார். இதேபோல் விகே பாண்டியன் தான் ஒடிசாவின் நிர்வாக முடிவுகளை எடுக்கிறார். அமைச்சர், அதிகாரிகள் யாராக இருந்தாலும் விகே பாண்டியனைத்தான் பார்க்க வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. ஒடிசாவை சாராத ஒருவர் அந்த அரசை இயக்குவது சரியா? இது தவறு.
இந்நிலையில் பூரி ஜெகநாதர் ஆலையத்தினுடைய கருவூலத்தின் சாவு காணாமல் போய்விட்டது. அந்த சாவி திருடுபோனதை யாரோ திட்டம் போட்டு மறைத்திருக்கிறார்கள்.. 12 வருடங்களாக முதல்வரின் செக்டட்டரியாக இருந்தவர் விகே பாண்டியன். அப்ப அந்த சாவி எங்கே போனது? அதற்கு கமிட்டில் எல்லாம் போட்டிருக்கிறார்கள். இன்று ஒடிசாவில் பாஜகவின் உறுதி மொழி, அங்கு ஜெகநாதர் ஆலயத்தின் சாவியை கண்டுபிடித்து, திரும்ப கொண்டு வந்து பூரி ஜெகநாதர் அவர்களுக்கு என்ன மரியாதை செய்ய வேண்டுமோ அதை நாம் செய்வோம்.
அந்த சாவி யார் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு முதலமைச்சரே டெக்னிக்கலாக விகே பாண்டியன் தான்.. அந்த சாவி எங்கே போனது.. அந்த சாவியை யார் எடுத்து வெளியே கொடுத்திருக்கிறார்கள்.. இதைதான் கூறியிருந்தார். எனவே முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அவரது அறையை தாண்டி இந்தியாவில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்" இவ்வாறு அண்ணாமலை வீடியோவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications