எடப்பாடி எதிர்பார்க்காத ரூட்டில் செக் வைக்கும் எஸ்பி வேலுமணி? பரபரப்பில் அதிமுக நிர்வாகிகள்
சென்னை: அதிமுகவில் மீண்டும் உட்கட்சி யுத்தம் வெடித்துள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்புக்கும் இடையே கட்சியில் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சியை கைப்பற்ற இரு தரப்பும் காய் நகர்த்தி வரும் நிலையில், எஸ்பி வேலுமணி தரப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. 47 இடங்களில் மட்டுமே வென்ற அந்தக் கட்சி 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், அதிமுகவில் மீண்டும் கலகக்குரல்கள் எழுந்துள்ளன. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தலைமையில் மற்றொரு அணியாகவும் அதிமுக பிளவுபட்டு இருக்கிறது.

25 பேர் தவெகவுக்கு ஆதரவு
அதில் விஜய்யின் தவெக அரசுக்கு சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினர் 22 பேர் எதிராகவும், வேலுமணி தரப்பில் 25 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர், கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி தவெக ஆதரவு அளித்ததாக, வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் மற்றும் சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர்.
எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கும் வேலுமணி தரப்பு
அதேபோல் வேலுமணி தரப்பினர், கொறடா விஜயபாஸ்கரின் உத்தரவை மீறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். இந்த 2 தரப்பு மனுக்கள் மீதும் சட்டப்படி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியுள்ளார்.
இன்னொரு பக்கம், வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆதரவு நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். ஆனால், "கட்சியில் பிளவு நிலவி வரும் நிலையில் எங்களை நீக்கியது செல்லாது" என்று வேலுமணி தரப்பினர் கூறுகின்றனர். இதற்கிடையே, கட்சியின் பொதுக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்று எஸ்பி வேலுமணி தரப்பு எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
பொதுக்குழுவை கூட்ட கையெழுத்து
பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று எடப்பாடி பழனிசாமி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப எஸ்பி வேலுமணி தரப்பு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 5 ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டால் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று அதிமுகவின் பைலாவில் கூறப்பட்டு இருப்பதாகவும், இதனால் சுமார் ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற எஸ்பி வேலுமணி தரப்பு தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிகிறது.
இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பு கேட்டால் பொதுக்குழுவை கூட்ட ஆதரவாக கையெழுத்து போட வேண்டாம் எனக் கூறியிருந்தார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - எஸ்பி வேலுமணி இடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருவது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.













Click it and Unblock the Notifications