அதிமுக + தவெக + பாஜக.. நடக்குமா? தேர்தல் கூட்டணிக்கு விஜய்க்கு அழைப்பா? போட்டு உடைத்த பவன் கல்யாண்
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில், அதிமுக + தவெக + பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்பட்ட நிலையில், சென்னையில் நடந்த பாஜக கருத்தரங்கிற்கு வந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருமாறு விஜய் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து நடிகர் பவன் கல்யாண் கூறியதை இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உள்ளது. இதேபோல் அதிமுகவும் தேர்தலுக்கு தற்போதே தயாராகும் வகையில் கூட்டணியை பலப்படுத்த வேலைகளை செய்து வருகிறது. இதில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்திக்க இருக்கிறது.

அதிமுக பாஜக கூட்டணி
இதேபோல் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என சீமான் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதற்கிடையே புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்யும் 2026 தேர்தலில் களம் காண்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், 2026 தமிழக சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று கூறி, அதற்கு ஏற்றார்போல் கட்சியை படிப்படியாக பலப்படுத்தி வருகிறார்.
இதனால் தமிழகத்தில் தற்போதைக்கு 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல் தமிழக வெற்றிக் கழகம் பாஜக தான் கொள்கை எதிரி என்றும், திமுக தான் அரசியல் எதிரி என்றும் சொல்லிவிட்டது. இதனால் அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டார்.
நடிகர் பவன் கல்யாணிடம் கேள்வி
இதுவரை அதிமுகவை விமர்சிக்காமல் வந்த தவெக, இதன் பின்னர் அதிமுகவை விமர்சிக்கத் தொடங்கியது. மறுபுறம் திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்து வருகிறார். பதிலுக்கு திமுகவோ விஜய் பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார் என்று விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. தமிழிசை சவுந்தரராஜன் கூட விஜய் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லவே இல்லையே என்பது போல் கூறியிருந்தார்.
இதனால் தமிழகத்தில் அதிமுக + தவெக + பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருமாறு பாஜக விஜய்க்கு அழைப்பு விடுத்ததாக பேசப்பட்டது. இத்தகைய சூழலில் தான் சென்னையில் நடந்த பாஜக கருத்தரங்கிற்கு வந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருமாறு விஜய் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து நடிகர் பவன் கல்யாண் கூறியதாவது:-
விஜய் உடன் பேச்சுவாத்தை?
விஜய்க்கு எனது வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு கட்சியை ஆரம்பித்து எப்படி நடக்க வேண்டும் என்பதை பொறுத்தவரை அந்த கட்சியின் தலைவருடைய முடிவாகவே இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருமாறு விஜய் உடன் பேச்சுவார்த்தை எதுவும் தற்போது வரை நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை திருவான்மியூரில் இன்று தமிழக பாஜக சார்பில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டக் கருத்தரங்கு நடந்தது. இதில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. இதில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுகின்றனர். அந்த காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நல்லது என்று சொன்னார்கள்.. ஆனால் இன்று அதை எதிர்க்கிறார்கள்" என்று பேசினார். முன்னதாக பாஜகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்காது என தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications