"நில்லுங்கப்பா".. கலங்கும் எடப்பாடி பழனிசாமி?.. 18 மாஜிக்களாமே.. அதுவும் 3 மணி நேரம்.. அடுத்த சரவெடி
18 மாஜிக்களுடன் எடப்பாடி பழனிசாமி 3 மணி நேரம் பேசி முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது
சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில், திமுக கூட்டணி களத்தில் தீவிரம் காட்டி வரும்நிலையில், அதிமுக தரப்பு அதிரடியான எந்த முடிவையும் இதுவரை அறிவிக்கவில்லை.. தொடர் ஆலோசனை கூட்டங்கள், நடந்துவரும் நிலையில் 2 விதமான சிக்கல்களையும் அக்கூட்டங்களில் விரிவாக பேசியதாக கூறப்படுகிறது.
ஈரோடு இடைத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி கொண்டிருக்கின்றன.. கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜகவும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது.
ஆனால், பாஜக இன்னும் எந்த முடிவையும் சொல்லவில்லை.. பாஜக போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தருவோம் என்று ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.
இந்திக்கு எதிரான போராட்டம் தொடரும்.. பிற மொழிகளை அழிக்க பாஜக முயற்சி.. மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
அடித்தாடும் பாஜக
அதேசமயம், எங்கள் தரப்பிலிருந்தும் வேட்பாளரை இறக்குவோம் என்றும் ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார்.. இது திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது என்றாலும், பாஜகவின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.. ஆனால், ஓபிஎஸ் + எடப்பாடி என இரு அணிகளாக களமிறங்குவது அதிமுகவுக்கு பாதகமாகவே பார்க்கப்படுகிறது... இதனால் வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.. அதுமட்டுமல்லாமல், அதிமுகவுக்கு பாஜக ஆதரவு தருமா? அல்லது ஒருங்கிணைந்த அதிமுக சாத்தியமாகுமா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன..
இடியாப்ப சிக்கல்
எனினும், அதிமுகவில் நடக்கும் குளறுபடிகளை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு 2 விதமான சிக்கல்களும், குழப்பங்களும் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் போட்டியிட யாரும் முன்வரவில்லையாம்.. அதே நேரத்தில், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தை பாஜக மேலிடம் முன்னிறுத்திவிட்டால் என்ன செய்வது? என்பதே மற்றொரு குழப்பமாக உள்ளதாம்..
18 மாஜிக்கள்
எனவேதான், வேட்பாளராக யாரை நிறுத்தலாம்? இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? சின்னத்தை தேர்தல் கமிஷனில் கேட்டு பெறுவது எப்படி? என்பது குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு நேற்றுமுன்தினம் அழைப்பு விடுத்தார். இதையடுத்து சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு தம்பிதுரை எம்பி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திரபாலாஜி, கேபி முனுசாமி, இசக்கி சுப்பையா, காமராஜ், கேபி அன்பழகன், செல்லூர் ராஜூ, எம்சி சம்பத், சி.விஜயபாஸ்கர், கேசி வீரமணி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, பெஞ்சமின், ஆர்பி உதயகுமார், வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் வந்திருந்தனர்..
கேவி ராமலிங்கம்
அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. ஆனாலும் வேட்பாளராக யாரும் போட்டியிட முன்வரவில்லை என்று தெரிகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு, "யாராவது நில்லுங்கப்பா, செலவுகளை நாங்களே ஏற்கிறோம்" என்றும் சொன்னதாக கூறப்படுகிறது... நடந்து முடிந்த இந்த ஆலோசனை கூட்டத்தையடுத்து, மூத்த நிர்வாகிகள் சொல்லும்போது, "ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட யாரை நிறுத்தலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டது... அப்போது முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கத்தை நிறுத்த ஆலோசிக்கப்பட்டது.. ஆனால் அவர் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை...
நில்லுங்கப்பா
தேர்தல் செலவுகளை கட்சியே ஏற்றுக்கொள்ளும் என்று சொன்னதையடுத்து, அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்... அதேபோல, இரட்டை இலை சின்னத்தை எப்படி பெறுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வரும் ஓபிஎஸ்ஸை மன்னிக்கவே கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், கட்சி நம்மிடம் தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், எல்லாருமே இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது" என்றார்.
ஹைடென்ஷன்
கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த பாஜகவும் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது.. எந்த முடிவையும் அறிவிக்கவில்லை... கூட்டணி தர்மப்படி தமாகா உடன் பேசி, அதிமுக போட்டியிட ஒருமனதாக முடிவு எட்டப்பட்டுள்ளது.. காரணம், இது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்துக்கான முழு அடித்தளமாகவே பார்க்கப்படுகிறது... கட்சிக்கு ஒற்றை தலைமைதான் என்று தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், அதை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகவும் இந்த இடைத்தேர்தலை எடப்பாடி தரப்பு எதிர்கொள்வதாக தெரிகிறது.. ஒருவேளை சறுக்கலை சந்தித்தால், இரட்டை தலைமையே மீண்டும் வலியுறுத்தப்பட்டுவிடுமோ என்ற கலக்கமும் சூழ்ந்துள்ளதால், எப்படியாவது வெற்றி கொள்ள முனைப்பு காட்டி வருகிறாராம்.