நம் வரலாற்றை ஆங்கிலேயர்கள் அழித்தார்களா? மகாவிஷ்ணு அவிழ்த்துவிட்ட பொய்கள்: யார் இவர்?
சென்னை: ஒரு காலத்தில் காமெடி பேச்சாளராக வலம் வந்த மகாவிஷ்ணு என்பவர் பள்ளி விழாவில் பேசிய போது ஆங்கிலேயர்கள்தான் இந்திய வரலாற்றை அழித்துவிட்டார்கள் என்று பேசி இருந்தது சர்ச்சையாகி உள்ளது. உண்மையில் நமது நாகரிகத்தை பிரிட்டிஷ்காரர்கள் அழித்தார்களா?
சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்ட மகாவிஷ்ணு என்பவர் பேசியது முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விடும் அளவுக்கு சீரியஸாக மாறி இருக்கிறது. இவரது சர்ச்சை பேச்சு பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். அறிவாற்றலை கூர்மைப்படுத்தச் சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக் கூற முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, “கல்விக்குத் தொடர்பில்லாத எந்த நிகழ்ச்சிகளையும் அரசு அனுமதியின்றி பள்ளிகளில் நடத்தக் கூடாது” என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அப்படி என்னதான் மகாவிஷ்ணு பேசினார்? ஏன் இந்த எதிர்ப்பு நிலவுகிறது? அவர் பள்ளி மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாகப் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் பூர்வஜென்மத்தில் செய்த பாவம்தான் இந்தப் பிறவியில் அனுபவிக்கக் கூடிய கஷ்டங்களுக்கு எல்லாம் காரணம். ஒருவர் உடல்ரீதியாகக் குறைபாடு கொண்டு பிறப்பதற்குக் கூட அவர் முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்கள்தான் காரணம் என்று அறிவியலுக்கு ஒப்பாத கருத்துகளைப் பேசிக் கொண்டே போனார்.
மேலும் ஒரு மந்திரம் சொன்னால் பறந்து போவான். ஒரு மந்திரம் சொன்னால் நெருப்பு மழை பெய்தது. ஒரு மந்திரம் சொன்னால் நோய் குணமாகும். ஆனால், அதை எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அழித்துவிட்டனர். இன்று அவை அனைத்தும் மண்ணோடு மண்ணாக அழிந்துபோய்விட்டது என்று எந்தவித வரலாற்று ஆதாரமும் இல்லாமல் இவர் அடித்துவிட்டார்.
அதைக் கேட்ட ஆசிரியர் ஒருவர் தன்னம்பிக்கை பேச்சுகளில் இதைப்போன்ற கருத்துகள் வராது. ஆன்மிக சொற்பொழிவு என்ற சாக்கில் இந்த மாதிரியான பிற்போக்கு கருத்துகளைச் சொல்லவேண்டாம் எனக் கோரிக்கை வைத்தார். அதற்கு மகாவிஷ்ணு பதில் அளிக்காமல், ஹெச்.ராஜா, அண்ணாமலை மற்றும் சீமான் பாணியில் 'உங்கள் பெயர் என்ன?’ என்று அவசியமே இல்லாத ஒரு கேள்வியை எழுப்பினார். அவர் ஆசிரியர் பதில் தரவில்லை. உடனே, 'நீங்கள் ஒரு கேள்வி எழுப்பும்போது பதிலுக்கு நான் ஒரு கேள்வியை எழுப்புகிறேன். அதற்கு நீங்கள் ஏன் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்?’ என்றார்.
தொடர்ந்து, 'நான் என்ன பேச வேண்டும் என்பதை நீங்கள் சொல்லக் கூடாது. அதற்கு ஏன் என்னை அழைக்கவேண்டும். பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளைவிட நீங்கள் அறிவாளியா?’ என்றும் விடாமல் பேசினார். இறுதியாக, 'நான் ஒரு விசயத்தைப் பேசும்போது அவருக்கு வலிக்கிறது. அப்படி அவர் மனதில் ஏதோ கில்டி இருக்கிறது. அதுதான் காரணம்’ என்று ஆவேசம் குறையாமல் சாமியாடினார் இந்த இளம் சாமியார் எனத் தன்னை சொல்லிக் கொள்ளும் மகாவிஷ்ணு.
இவர் யார்? எப்படி சாமியார் ஆனார்? இவர் சில ஆண்டுகள் முன்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றினார். அதற்கு முன்னால் இளம் வயதில் அதே தொலைக்காட்சி நிறுவனம் மதன்பாப் போன்றவர்களை நடத்திய காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துண்டு ஜோக்குகளை பேசிவந்தார். அந்தக் காமெடி காட்சிகளை இப்போது சமூக வலைத்தளத்தில் எடுத்துப் போட்டு இவரை வறுத்து எடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதில் உச்சகட்ட காமெடி என்னவென்றால் பள்ளி நிகழ்ச்சிக்கு இவரை எந்த அடிப்படையில் அழைத்தார்கள் என்றே புரியவில்லை. இவர் தன்னைத் தானே ஆன்மிக குரு என்று சொல்லிக் கொண்டு, எந்தவித விசய ஞானமும் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்காக ஒரு அறக்கட்டளை வேறு அமைத்து நடத்தி வருகிறார். சில ஆண்டுகள் முன்பாக ஒரு பிரபல யூடியூபருடன் அறை நண்பராக இருந்த இவரைப் பற்றிய நினைவுகளை ஒரு சேனல் காணொளியாக வெளியிட்டிருந்தது.
வழக்கமான சாமியார்கள் போல, காசிக்குப் போய் போஸ் கொடுப்பது? தியானம் செய்து சக்தி அடைந்ததைப் போல் புகைப்படங்களைப் போடுவது எனப் பல அலப்பறைகளை இவர் சில ஆண்டுகளாகவே செய்து வருகிறார். இந்நிலையில்தான் இப்போது இந்தப் பள்ளியில் பேசிய பேச்சின் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஃபேஸ்புக்கில் இது பற்றி விரிவாக எழுதியுள்ள கார்திக் வேலு என்பவர் எழுதியுள்ள பதிவில், “ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடி இருக்கும் அரங்கில் பேசமுடிவது என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு , எவ்வளவு அரிய வாய்ப்பு !. Standing in front of such eager faces and impressionable minds should in itself bring in great humility and responsibility to anyone. இவர் ஏதோ நேரே இன்ஸ்டாவில் இருந்து இறக்குமதி ஆன 'பாம்பு எண்ணெய் விற்பவர்' போலல்லவா பேசுகிறார் .
பாவ புண்ணியம் என்ற நம்பிக்கையை முன்னே வைக்கிறார் . கை கால் ஊனம் பாவ புண்ணிய காரணம் என்கிறார் , கேட்டால் இது ஆன்மீகம் என்கிறார் ,all are equal என்கிறார் . உண்மையாகவே கேட்கிறேன் . குழந்தைகளிடம் பொறுப்புடனும் காமென் சென்ஸுடனும் பேசத்தெரிந்த வேறு ஆட்களே தமிழகத்தில் இல்லையா ?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்த மகாவிஷ்ணு வரலாறு தெரியாமல் பேசுகிறார். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வந்த பிறகு மானுடவியல் ஆய்வு என்பது நடத்தப்பட்டது. அதற்கு என்று ஒரு துறையை உருவாக்கி ஆராய்ச்சி செய்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான். இந்தியர்களின் சிந்துவெளி நாகரிகத்தைக் கண்டுபிடித்துச் சொன்னவர் ஜான் ஹுபர்ட் மார்ஷல். இவர் ஒரு ஆங்கிலேய அதிகாரிதான்.
அசோகன் என்ற மன்னன் இந்தியாவை ஆண்டார் என்று 2 ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆங்கிலேயர்கள்தான் கண்டுபிடித்து உலகிற்குச் சொன்னார்கள். அது மட்டுமல்ல, தஞ்சையில் உள்ள கோயிரை யார் கட்டியது என்பதே தெரியாமல் தமிழர்கள் வாழ்ந்துவந்தனர். அதை ராஜராஜன் என்ற மன்னர் தான் கட்டினார் என்பதை அகழ்வாராய்ச்சி செய்து சொன்னதே ஆங்கிலேயர்கள்தான். தமிழில் எழுதப்பட்டு இருந்த திருக்குறள், திருவாசகம் என்ற நூல்களைப் படித்து வியந்த ஆங்கிலேயப் பாதிரிமார்களான ஜி.யூ.போப் போன்றவர்கள் அதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து உலகிற்குச் சொன்னார்கள் என்பதே வரலாறு.
அதை எல்லாம் மூடி மறைத்துவிட்டு, வரலாறு தெரியாமல் ஓலைச்சுவடிகளை எல்லாம் ஆங்கிலேயர்கள் அழித்துவிட்டனர் என அடித்து விடுகிறார் மகாவிஷ்ணு. அதுவும் நாளை அறிவியல் பார்வையோடு அணுகவேண்டிய இளம் தலைமுறையினர் மத்தியில் பொய்களைப் பரப்புகிறார். இதை பியூஷ் போன்ற சமூக ஆர்வலர்கள் வாட்ஸ் அப் யுனிவர்சிடியில் படித்தால் இப்படித்தான் சொல்ல வேண்டி இருக்கும் என விமர்சித்துள்ளனர். இவரைப் போலப் பலர் தங்களின் விமர்சனங்களைத் தொடர்ந்து எழுதி வருகின்றனர். அதுவும் கொந்தளித்துப் போய் எழுதி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications