புதிய சிக்கல்.. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கிளம்பிய இன்னொரு பிரச்சனை! ஆய்வில் வெளியான ஷாக் தகவல்
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக தொடர்ந்து கூறப்படும் நிலையில் தற்போது இன்னொரு புகார் கிளம்பி உள்ளது. இதனால் பஸ் நிலையத்தில் இன்னும் மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் ரூ.393.75 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பஸ் நிலையம் கடந்த பொங்கல் பண்டிகைக்கே பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பஸ் நிலைய பணிகள் முடியவில்லை. அதோடு சில குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது முந்தைய அதிமுக ஆட்சியில் இந்த பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கியது. அப்போது எந்தவித திட்டமிடலும் இன்றி இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளதால் தொடர்ந்து பல பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக மழை நீர் வெளியேறுவதில் பிரச்சனை இருந்தது.
இதனால் மழை பெய்யும்போது தண்ணீர் பஸ் நிலையத்தில் தேங்கியது. இதையடுத்து அதனை சரிசெய்யும் பணிகள் தொடங்கியது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற்றும் அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த பணி ரூ. 13 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பணி முடிந்த பிறகு பஸ் நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இருக்கிறதா? என்பது குறித்து தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதிகளை கொண்ட குழுவினர் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் அமைக்கப்படும் பஸ் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்து வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதமின்றம் சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி நடந்த ஆய்வில் பஸ் நிலையத்தின் கட்டியதில் சில பிரச்சனைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது பஸ் நிலையத்தில் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் தொட்டுணரும் வகையிலான வழிகள் இல்லை. மேலும் சாய்தள பாதைகள் சரியாக அமைக்கப்படவில்லை. அதாவது 1:12 என்ற அளவில் சாய்வுதளம் அமைக்கப்பட வேண்டும். அதோடு 9 மீட்டருக்கு தொடர் சாய்வுதளம் அமைக்கப்பட வேண்டும்.
ஆனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் சுமார் 25 மீட்டருக்கு தொடர்ச்சியாக சாய்தளம் அமைகப்பட்டுள்ளது. இது சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பதில் மேலும் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications