ஒருங்கிணைந்த அதிமுக.. இரட்டை இலையில் போட்டி.. ஓபிஎஸ்-க்கு கையெழுத்து போடுவாரா எடப்பாடி பழனிசாமி?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமையும் சூழல் உருவாகியுள்ளது. நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சந்தித்துள்ளனர். சுமார் 45 நிமிடங்கள் நடந்த சந்திப்பில் அதிமுக தரப்பில் பல்வேறு பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா சந்திப்பு தொடர்பான கேள்விக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எல்லாம் நன்மைக்கே என்று பதில் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நேற்றிரவு சென்னையில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் இணைந்து கலந்து கொண்டனர்.

இதனால் சட்டமன்றத் தேர்தலுக்குள் ஒருங்கிணைந்த அதிமுக உருவாகுவதற்கான வாய்ப்புகள் கணிந்து வருவதாக பார்க்கப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கவும் பாஜக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் திமுக கூட்டணியை எதிர்க்க பிரம்மாண்ட கூட்டணி அமைத்தால் மட்டுமே சட்டமன்றத் தேர்தலில் சவால் அளிக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்கவில்லை என்றாலும், அவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் கடுமையாக சரிவு ஏற்பட்டது. அதனை பாஜக மற்றும் ஓபிஎஸ் மூலம் சரிகட்ட முடியும். இதனை அதிமுகவும் உணர்ந்தே இருக்கும்.
இதன் காரணமாக பாஜகவுக்கு அளிக்கும் தொகுதிகளில், உள் ஒதுக்கீடாக ஓபிஎஸ்-க்கு கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ஓபிஎஸ் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடாமல், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவே அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அங்குதான் ஒரு ட்விஸ்ட் உள்ளது. ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றால், அவருக்கு அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கப்பட வேண்டும்.
அதேபோல் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ்-க்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட கடிதம் அளிக்க வேண்டும். அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு கையெழுத்திடும் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்றுதான் ஓபிஎஸ் அதிமுகவின் பொதுக்குழுவை எதிர்த்து தர்ம யுத்தத்தை தொடங்கினார்.
ஆனால் இன்று சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடும் கடிதத்தின் மூலமாக ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால், கடந்த 3 ஆண்டு கால உரிமை போராட்டம் எதற்கு என்ற கேள்வியும் வரும். அதேபோல் ஓபிஎஸ்-ஐ எக்காரணம் கொண்டு அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை என்று கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, அவரே கையெழுத்திட்ட கடிதத்தை ஓபிஎஸ்-க்கு வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications