எனக்கு தற்கொலை செய்ய எண்ணம் வருது.. 2 நாள் முன்னாடியே நண்பரிடம் டிஐஜி விஜயகுமார் வேதனை
சென்னை: தற்கொலை எண்ணத்தை தனது நண்பரிடம் கடந்த 2 தினங்களுக்கு முன்பே டிஐஜி விஜயகுமார் சொன்னதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கோவை சரக டிஐஜியாக இருந்த விஜயகுமார் நேற்றைய தினம் தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகுமாரின் தற்கொலைக்கு பணிச்சுமையா, குடும்ப பிரச்சினையா என்பதை விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து விஜயகுமாரின் மனைவி, மகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் விஜயகுமார் கடந்த 10 ஆண்டுகளாகவே மன நல பாதிப்புக்கு மருத்துவ சிகிச்சைகளை பெற்று வந்தார். இரு நாட்களுக்கு முன்பாக தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாக நண்பரிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த நண்பர் விஜயகுமாரை நேரில் சந்தித்து தைரியம் கூறியிருந்தாராம்.
அது போல் மன நலனுக்கு சிகிச்சை பெற்று வந்த விஜயகுமார் ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெறாமல் அடிக்கடி மருத்துவர்களை மாற்றி வந்தாராம். அத்துடன் எந்த நோய்க்கு யாரிடம் மருத்துவம் பார்ப்பது, கை வைத்தியம் என்ன என்பது குறித்த குறிப்புகளையும் அவர் எழுதி வைத்திருந்தாராம்.
அது போல் நேற்று முன் தினம் இரவு கூட பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரனிடம் 183 ரக துப்பாக்கியை எங்கே வைப்பீர்கள், அதில் தோட்டாவை எப்படி லோடு செய்வது, எப்படி இயக்குவது குறித்தெல்லாம் கேட்டுள்ளார். அதற்கு ரவிச்சந்திரனும் துப்பாக்கி எங்கே இருக்கிறது என்ற விவரத்தையும் தெரிவித்ததுடன் அதில் குண்டுகள் லோடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் நேற்று காலை டிஎஸ்ஆர் பதிவை பார்த்துவிட்டு துப்பாக்கி வைத்திருக்கும் அறைக்கு ரவிசந்திரனுடன் சென்றார் விஜயகுமார். அப்போது எப்படி இயக்குவது என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் இயக்கம் குறித்து கூறிய ரவிசந்திரன் சட்டை மாற்றிய போது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு விஜயகுமார் அவரது அறைக்கு சென்றுவிட்டார்.
அப்போதுதான் திடீரென துப்பாக்கிச் சப்தம் கேட்டு ரவிச்சந்திரன் ஓடி போய் பார்த்த போது அவர் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications