எழும்பூர் ரயில் நிலையத்தில் அகற்றப்பட்ட டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள்.. பயணிகள் கடும் அவதி
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் புறப்பாடு, வருகை குறித்து அறிந்து கொள்ள உதவும், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து, நாள்தோறும் சுமார் 30 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் எழும்பூரிலிருந்தே புறப்படுகின்றன.

தினசரி சுமார் ஒன்றரை லட்சம் பயணிகள் வந்து செல்லும் எழும்பூர் ரயில் நிலையத்தில், கடந்த 6 மாதங்களாக ரயில் புறப்பாடு வருகை குறித்து அறிய உதவிய டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பயணிகள் நுழைவு வாயில் மற்றும் நடைமேடை 4-ல் இருந்த எல்இடி அறிவிப்பு பலகைகள் கடந்த 6 மாதங்களாக இல்லை. இதனால் எந்தெந்த ரயில்கள் எந்த நடைமேடைகளில் வரும் என்பதை அறிய முடியாமல் மிகுந்த தடுமாற்றம் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.
ரயில் நிலையம் முழுவதும் விளம்பர பலகைகளே ஆக்கிரமித்துள்ளன. பயணிகளுக்கு தேவையான டிஜிட்டல் அறிவிப்பு பலகைகளை வைக்காமல் விளம்பர பலகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர் பயணிகள்.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் கேட்ட போது எழும்பூர் ரயில் நிலையத்தில் தனியார் நிறுவனம் ஒன்று, ஒப்பந்த அடிப்படையில் பெரிய டிஜிட்டல் பலகை மற்றும் சிறிய அறிவிப்பு பலகைகளை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
அந்த நிறுவனத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரயில்வே நிர்வாகம் நீடிக்காததால், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரயில் நிலையத்தில் அறிவிப்பு பலகைகள் வைப்பது தொடர்பாக டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications