டிக் டாக் இலக்கியா தற்கொலை முயற்சி.. நான் காரணமா? திலீப் சுப்பராயன் பரபர பேச்சு
சென்னை: நடிகை இலக்கியாவின் தற்கொலை முயற்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் விளக்கம் அளித்துள்ளார். தன் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக யாரோ இப்படி செய்கிறார்கள் என்று கூறியுள்ள அவர், இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
டிக் டாக் செயலில் அதிக கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டுப் பிரபலமானவர் இலக்கியா. டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்னர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலியில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இவர் பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இலக்கியா திடீரென அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனிடையே இலக்கியா அளவிற்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதனிடையே இலக்கியா தற்கொலைக்கு முயற்சி செய்தாரா சந்தேகம் எழுந்தது.
ஏனென்றால் அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும்தான் காரணம். என்னை நம்ப வைத்து ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கிறேன். நிறைய பெண்களோடு பழக்கம்.. அதனைக் கேட்டா என்னை போட்டு அடிக்கிறான்.. நானும் பொறுத்து பொறுத்து.. என்னால் முடியல.. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான் என்று பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவுடன் சேர்த்து திலீப் சுப்பராயன் புகைப்படத்தையும் இணைத்திருந்தார். இதன்பின் அடுத்த சில மணி நேரங்களில் பதிவை இலக்கியா நீக்கியதால் சர்ச்சை எழுந்தது. இந்திய சினிமாவில் மிக முக்கியமான ஸ்டண்ட் இயக்குநராக திலீப் சுப்பராயன் வலம் வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான தெறி, ஜில்லா, அஜித் நடிப்பில் வெளியான வலிமை, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியவர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் பணியாற்றி வருகிறார். இவர் மீது இலக்கியா நேரடியாக குற்றம்சாட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக திலீப் சுப்பராயன் விளக்கம் கொடுத்துள்ளார். திலீப் சுப்பராயன் பேசுகையில், நடிகை இலக்கியாவின் தற்கொலை முடிவுக்கு நான் காரணம் கிடையாது.
என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக யாரோ இதனை செய்கிறார்கள். இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன். வேட்டுவம் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் இருந்தே இன்னும் மீள முடியாமல் இருக்கிறேன். நடிகை இலக்கியாவின் தற்கொலை முயற்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications