அரங்கமே அதிர்ந்தது! திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன ஒரு வார்த்தை.. அதிமுக பொதுக்குழுவில் எழுந்த ஆரவாரம்!
சென்னை: எடப்பாடி பழனிசாமி பற்றி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன ஒரு வார்த்தையால் அதிமுக பொதுக்குழு அரங்கமே கரகோஷம், ஆரவாரத்தால் அதிர்ந்தது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாஜக உடனான கூட்டணி முறிந்த பின்னர் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார். மேலும், அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள், தீர்மானங்களை வழிமொழிந்தனர்.
இன்றைய அதிமுக பொதுக்குழுவில் திமுக அரசைக் கண்டித்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காமல் மீனவர்களை வஞ்சிப்பது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் விவசாயிகளை வஞ்சிப்பது என திமுக அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதேபோல, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மக்களவையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக நடந்த அத்துமீறல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
இந்தப் பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பாக, இந்த பொதுக்குழுவை நடத்தித் தருமாறு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனை கேட்டு முன்மொழிந்தார் எடப்பாடி பழனிசாமி. அதனை வழிமொழிந்து பேசிய அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமியை வானளவாவப் புகழ்ந்தார்.
திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், "கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர், வருங்கால முதலமைச்சர், புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்" என்றார். வருங்கால முதலமைச்சர் என திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதும், அரங்கில் கூடியிருந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய உற்சாக ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது.












Click it and Unblock the Notifications