மனம் திறந்த மாரி செல்வராஜ்.. ரத்னவேல் பற்றி முதல்முறை கருத்து! பகத் பாசில் கட்டிப்பிடிச்சாராமே
சென்னை: மாமன்னன் படத்தின் வில்லன் கதாபாத்திரமான ரத்னவேல் குறித்து அதில் நடித்த பகத் பாசில் குறித்தும் முதல் முறையாக மனம் திறந்துள்ளார் மாரி செல்வராஜ்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் மாரி செல்வராஜ். தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கி கண்கலங்க வைத்தவர். இவர் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படம் உருவானது.

கடந்த ஜூன் மாதம் வெளியான மாமன்னன் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. பட்டியலின மக்களுக்கு எதிராக நிகழும் ஒடுக்குமுறைகளை பட்டவர்த்தமாக காட்டி இருக்கிறது மாமன்னன். இப்படத்தை காண அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
படத்தில் மாமன்னனாக நடித்த வடிவேலு மற்றும் உதயநிதியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் நெட்பிளிக்சில் வெளியான இப்படம் உலகளவில் டிரெண்டிங் நம்பர் 1 ல் இப்படம் இருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார். இந்த நிலையில் ஓடிடியில் படத்தை பார்த்த ரசிகர்கள் வில்லன் பகத் பாசிலின் நடிப்பை சிலாகித்து வருகிறார்கள்.
அசாத்திய நடிப்பால் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்ட இருப்பார் பகத் பாசில். பகத் பாசிலின் நடிப்புத் திறனை பாராட்டும் ரசிகர்களுக்கு மத்தியில், சாதி பெருமை பேசுபவர்கள் பகத் பாசிலை ஹீரோவாக கொண்டாடத் தொடங்கி சாதி வெறியை பரப்பும் வேலையில் ஈடுபட்டனர். ரத்னவேல் கதாபாத்திரத்தின் காட்சிகளை ஒட்டி வெட்டி பின்னணியில் சாதி பெருமை பேசும் பாடல்களை ஓடவிட்டு சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தனர்.
மாரி செல்வராஜை பழிவாங்குவதாக நினைத்து அவர்கள் செய்த இந்த வேலையால் கடந்த சில நாட்களாகவே பகத் பாசிலின் ரத்னவேல் கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்தன. பலரும் மோசமான விளைவை உணராமல் பகத் பாசில் கதாபாத்திரத்தை ஊக்குவிக்கும் மீம்கள், வீடியோக்களை வெளியிட்டதுதான் வேதனை.
சமூக நீதி பேசும் மாமன்னன் திரைப்படம் எடுக்கப்பட்ட நோக்கத்தையே சிதைக்கும் வகையில் நெட்டிசன்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் பகத் பாசில் தனது பேஸ்புக் கவர் படத்தில் ரத்னவேல் கதாப்பாத்திர தோற்றத்தை வைத்தார். அதையும் சாதி ஆதரவாளர்கள் பகிர்ந்தனர்.
இந்த நிலையில் தனது பேஸ்புக் கவரில் இருந்த ரத்னவேல் கதாபாத்திர படத்தையே பகத் பாசில் நீக்கினார். இந்த நிலையில் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் ரத்னவேல் கதாபாத்திரத்தை ரசிகர்கள் டிரெண்ட் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இதற்கிடையே மாரி செல்வராஜ் முதல் முறையாக ரத்னவேல் கதாபாத்திரம், பகத் பாசில் நடிப்பு பற்றி மனம் திறந்து உள்ளார்.
அதில் அவர், "வணக்கம் பகத் சார்!!! உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கை முறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன்.
மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன். மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன்.
ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர் அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications