யூடியூபரின் செயல் ஏற்க முடியாதவை! வெட்கக்கேடானவை! பாய்ந்து வந்த பா.ரஞ்சித்
சென்னை: யூடியூபரின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவை ஏற்றுக் கொள்ள முடியாதவை என இயக்குநர் பா. ரஞ்சித் கருத்து பதிவிட்டு, நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவரை போல் நிறைய பேர் கவுரி கிஷனுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.
இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், "நிருபரின் செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்; அவை ஏற்றுக் கொள்ள முடியாத, வெட்கக்கேடானவை. பெண் நடிகர்கள் இன்னும் இந்த அநாகரிகமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது, தமிழ் சினிமா இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்பதைக் காட்டுகிறது" என பதிவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கவுரி கிஷனின் எடை என்ன என யூடியூபர் ஒருவர், அதர்ஸ் பட ஹீரோவிடம் கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அந்த யூடியூபருடன் கவுரி கிஷன் வாக்குவாதம் செய்தார்.
தனியொரு பெண்ணாக அந்த செய்தியாளர் சந்திப்பில் தன் தரப்பு நியாயத்தை ஓங்கி உரைத்தார். அவர் கூறுகையில் "எனது எடையை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் . எனது நடிப்பு, திறமை, ரோல் குறித்து கேட்காமல், படத்தில் என்னை தூக்கிய ஹீரோவிடம் வெயிட் என்ன என கேட்டது, என்னை பாடி ஷேமிங் செய்வதுதான்" என தைரியமாக தனது கருத்தை ஆணித்தரமாக முன்வைத்தார்.
அப்போது மேலும் அவரை பேசவிடாமல் யூடியூபர்கள் கத்தி கூப்பாடு போட்டதால் கவுரி கிஷன் கண்ணீர் விட்டார். இந்த நிலையில் கவுரி கிஷன் தைரியமாக செயல்பட்டதற்கு நடிகைகள் ரோகிணி, குஷ்பு, பாடகி சின்மயி, இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அது போல் நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. தனது கண்டன அறிக்கையில், இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அன்பு பத்திரிகை நண்பர்களுக்கு, வணக்கம், திரைத் துறையும் பத்திரிகைத் துறையும் பிரிக்கவே முடியாத சகோதரர்கள். நல்ல திரைப்படங்களையும் திறமையான கலைஞர்களையும் உச்சி முகர்ந்து கடைக்கோடி மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நீங்கள், நீங்கள் தவறு செய்யு போதும் சரியான விமர்சனங்களை மிகவும் நாகரிகமாக வெளிப்படுத்தி சரி செய்தும் வருகிறீர்கள்.
நேற்று நிகழ்ந்த இந்த நிகழ்வு மிகவும் விரும்பத்தகாதது. தமிழ் திரையுலகம் எப்போதுமே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகவே விளங்கி வருகிறது. 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் திரையுலகில் பெண்கள் நடிகைகளாக மட்டும் அல்லாமல் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் பிரகாசித்துள்ளனர்.
ஆனாலும் திரைத்துறையில் ஒரு பெண் நுழைந்து சாதிப்பது என்பது இன்னமும் பெரும் சவாலான ஒன்றுதான். அப்படி பெரும் சவாலை ஏற்று ஏதாவது ஒன்றை சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பெண்கள் திரைத்துறைக்கு அடி எடுத்து வைக்கிறார்கள்.
அப்படி திரைத்துறைக்கு வரும் பெண்களை அவர்களுக்கான பாதுகாப்பையும் அவர்கள் தன்மானத்தையும் சுய கவுரவத்தையும் பாதுகாப்பது என்பது நம் எல்லோரது கடமையும் கூட!
ஆனால் பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சில வக்கிரமான நபர்கள் பத்திரிகையாளர்கள் போர்வையில் நடிகைகளை பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பதும் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது. நேற்று எங்கள் சகோதரி ஒருவருக்கு நிகழ்ந்த நிகழ்வு அதே நபரால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும் நிகழ்ந்தது.
இன்றைய சூழலில் செல்போன் இருந்தால் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து பத்திரிகையாளர் ஆகிவிடலாம். திரைத்துறையினர் பற்றி அவதூறுகளை ஆபாசமாக பரப்பி பார்வையாளர்களை பெற்றுவிடலாம் என மோசமான நிலை நிலவுகிறது. இந்த சூழலில் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பத்திரிகைத் துறையில் இது போன்ற களைகள் முளைத்திருப்பது நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி சரியான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இனி எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க தேவையான முன்னெடுப்புகளை தொடங்குவோம் என நடிகர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications