“சென்சார் போர்டில் வலதுசாரிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது” - பா.ரஞ்சித்
சென்னை: திரைப்பட தணிக்கை குழுவில் வலதுசாரிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், அதை மீறித்தான் மக்களுக்கான திரைப்படங்களை எடுப்பதாகவும் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற தண்டகாரண்யம் பட விழாவில் பேசிய ரஞ்சித் இவ்வாறு கூறிருக்கிறார். மேலும் அவர் பேசியதாவது, "முன்பெல்லாம் ஓடிடி நிறுவனங்கள் எல்லா படங்களையும் வாங்கினார்கள். ஆனா இப்போ அவங்களுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கு. ஒரு படத்தின் மையக்கருவை வைத்து, அந்த படத்தை ஓடிடி தளத்திலிருந்து வெளியே எடுக்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

சர்வதேச அளவில் ஒரு காலத்தில் இடதுசாரி இயக்கங்கள் எப்படி பலமாக இருந்ததோ, அதேபோல அதைவிட பலமாக வலதுசாரி இயக்கங்கள் இப்போது இருக்கின்றன. முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தில் ஒரு குறியீடு இடம்பெற்றிருந்தால், அது குறித்து அறிவுசார் துறையை சேர்ந்தவர்கள்தான் ஆராய்வார்கள். குறியீடு மூலம் இயக்குநர் ஏதோ சொல்ல ட்ரை பண்றாருன்னு ஆராய்வாங்க. ஆனா இன்னைக்கு அந்த குறியீடு பற்றி கணக்கெடுப்பதற்கு பலபேர் முன் வந்துட்டாங்க.
குறிப்பாக சென்சார் போர்டு ரொம்ப தீவிரமா அதுல இருக்காங்க. வலதுசாரி ஆதரவு மனப்பான்மை கொண்ட சென்சார் போர்டு உறுப்பினர்கள், நாம் சென்சார் கேட்டு அப்ளை செய்யும்போது அவர்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள். நாம் உள்ளே வரும்போதே நம்மை பார்ப்பது, நம்மிடம் பேசுவது, நம்மை கையாள்வது எல்லாமே பயங்கரமாக இருக்கும்.
அதை மீறி ஒரு திரைப்படத்தை எடுத்து ரிலீஸ் பண்றது, அதை ரிலீஸ் பண்றப்போ, இங்க இருக்குற பார்வையாளர்கள் யாரு? ஓடிடி நிறுவனங்கள் யாரு? வெளியீட்டாளர்கள் யாரு? இவங்கள நம்ம எப்படி இந்த சமாளிப்பது? என இதெல்லாம் மீறி படங்களை ரிலீஸ் பண்ணுவது சவாலானதாக இருக்கிறது. ஆனாலும் நாங்கள் இதை தொடர்ந்து செய்கிறோம். ஏனெனில் இந்த வேலையை நாங்கள் விரும்பி செய்கிறோம்.
இதில் எங்களின் மிகப்பெரிய நம்பிக்கை மக்கள்தான். மக்களை மீறி நாங்கள் யாரையும் எதிர்பார்க்கவில்லை. திரும்ப திரும்ப நாங்கள் மக்களிடம்தான் செல்கிறோம். ஓடிடி தோல்வியடையும்போது நாங்கள் மக்களிடம் செல்கிறோம். அப்படி போகும்போது, மக்கள் ஏற்கெனவே கேட்ட, பழக்கப்பட்ட கதையை சொல்லாமல், எந்த பிரச்சனையும் இல்லாத ஒரு கதையை சொல்லாமல், அவர்கள் சந்திக்கும் நெருக்கடியை பற்றி பேசுகிற படங்களை கொடுக்கிறோம். அப்படியான படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பதன் மூலம், எங்களை கை கொடுத்து உயர்த்துவீர்கள் என்று நம்புகிறோம்" என கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications