பிடிவாத போட்டி.. தனிச்சின்னத்தில் சாதனை.. விசிக 'பொளேர்' வெற்றி - சிலாகிக்கும் பா.ரஞ்சித்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்தில் வெற்றிப் பெற்ற நிலையில், 3 தொகுதிகளில் கைக்கெட்டும் தூரத்தில் வெற்றியை சந்திக்கிறது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்து திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் ட்வீட் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் முன்னிலை பெற்ற திமுக, பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார். அண்ணா, கலைஞரைத் தொடர்ந்து, திமுக சார்பில் தமிழக முதல்வராகிறார் ஸ்டாலின்.
அதேபோல், திமுக கூட்டணி கட்சிகளும் கணிசமான இடங்களில் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்து வருகின்றன. காங்கிரஸ் கிட்டத்தட்ட 16 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

7,328 வாக்குகள் வித்தியாசம்
அதேபோல், திமுக கூட்டணியில் இடம்பெற்று 6 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியில், நாகை தொகுதி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனை விட 7,328 வாக்குகள் கூடுதலாக பெற்று ஆளூர் ஷாநவாஸ் வெற்றியடைந்துள்ளார்.

சாதித்த விசிக
அதேபோல் திருப்போரூர் - எஸ்.எஸ்.பாலாஜி, காட்டுமன்னார் கோயில் (தனி) - சிந்தனை செல்வன், செய்யூர் (தனி) - பனையூர் பாபு ஆகிய தொகுதிகளில் விசிக முன்னிலை வகிக்கிறது. இதில் 2 தனி தொகுதிகளிலும், 2 பொது தொகுதிகளிலும் விசிக முன்னிலை பெற்ற நிலையில், ஒன்றில் வென்றுவிட்டது. இதன் மூலம் தலித் மக்கள் வாக்குகள் மட்டுமின்றி மற்ற சாதியினரின் வாக்குகளையும் வெல்ல முடியும் என்று விசிக நிரூபித்துள்ளது.

குறைந்த நாட்களில்
குறிப்பாக, திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தான் பானை சின்னத்தில் விசிக போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ளது. குறைந்த நாட்களில் புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று, பொது தொகுதியில் வெற்றிபெறும் அளவிற்கு விசிக தேர்தல் பணிகளை மிக சிறப்பாக செய்துள்ளது.

பிடிவாதம்
இந்நிலையில், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், விடுதலை சிறுத்தைகளின் வெற்றியை குறிப்பிட்டு தனது ட்விட்டரில், "சாதிய மதவாதத்திற்கு எதிராக வெளிப்படையாக தன்னையும், தன்னை சார்ந்த தொண்டர்களையும் வழி நடந்தி, பிடிவாதமாக தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தனித்தொகுதியில் மட்டும் இல்லாமல் இரண்டு பொதுதொகுதியிலும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கும் விசிக& தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications