விஜய் பேச்சின் அந்த இரண்டு பாயிண்ட்.. ஃபயர் விட்ட பா ரஞ்சித்.. பரபரப்பு பதிவு
சென்னை: "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில் நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், தனது கட்சி கொள்கையை விளக்கி பேசினார். அப்போது அவர், திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கும் குடும்ப சுயநல கூட்டம் தான் நம்முடைய அரசியல் எதிரி. கொள்கை கோட்பாட்டளவில் திராவிடத்தையும் தமிழ்த் தேசியத்தையும் நாம் பிரித்துப் பார்க்கப் போவதில்லை. திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள்." என்று கூறினார்.

மேலும் "இங்கே ஒரு கூட்டம் கொஞ்ச காலமாக ஒரே பாட்டைப் பாடிக்கொண்டு, யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கலரை அவர்கள் மீது பூசிவிட்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் மட்டும் அண்டர் கிரவுண்டில் டீலிங் போட்டுக் கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் அறிக்கை வெளியிட்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எப்போதும் இந்த பாசிசம்... பாசிசம்... பாசிசம் அவ்வளவுதான். ஒற்றுமையாக இருக்கின்ற நம் மக்கள் மத்தியில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரிவினை பயத்தைக் காட்டி ஃபுல் டைம் சீன் போடுவது வேலையாகிவிட்டது. அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயசமா... அவர்களுக்கு நீங்களும் கொஞ்சமும் சளைக்காதவர்கள்தான். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி' என்று கூறி ஏமாற்றுகிறீர்கள். அதனால், இனிமேல் உங்களை எதிர்க்கிறவர்களுக்கு என்னதான் நீங்கள் கலர் பூசும் மோடி மஸ்தான் வேலையை செய்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை" என்றும் விஜய் கூறினார்.
இதேபோல், "பிளவுவாத சித்தாந்த அரசியல் மட்டும் எங்கள் எதிரி அல்ல. இவர்களை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், இந்த ஊழல் இருக்கிறதே, அது எங்க ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கவே முடியாது. கருத்தியல் பேசிக் கொள்கை நாடகமும் போடும், கலாசார பாதுகாப்பு வேஷமும் போடும். அதற்கு முகமூடிதான் முகமே. இப்படி முகமூடி போட்ட ஊழல் கபடதாரிகள்தான் இப்போதுதான் கூடவே இருந்து கொண்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். நம்முடைய ஒரு எதிரி இந்த பிளவுவாத சக்திகள். இன்னொரு எதிரி ஊழல் கபடதாரிகள். இங்கு யார் வரவேண்டும், வரக்கூடாது என்று தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். இங்கு சாதிகள் சமூக நீதிக்கான அளவுகளாக மட்டும்தான் இருக்கும். அதை வைத்து நம்ம மண்ணை வேறு மாதிரி மாற்ற வேண்டும் என்று எவ்வளவு முயற்சித்தாலும் அதை நம் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மகத்தான அரசியல் என்றால் அது மக்களுக்கான அரசியல் தான். அவர்களில் ஒருத்தனாக, அவர்களுக்காக ஒருத்தனாக எப்போதும் மாறாத மனதோடு மனதோடு களத்தில் நிற்பதுதான் எங்களின் நிரந்தர அரசியல் பாதை" என்றும் விஜய் கூறினார்.
விஜய்யின் பேச்சுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு " மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும், ஊழலுக்கும் எதிராக செயல்படப் போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்..மகிழ்ச்சி.. " இவ்வாறு பா.ரஞ்சித் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications