பாஜகவை ஒத்த வார்த்தையில் "ஆப்" செய்த எஸ்.ஏ.சி.. ஆனால் உடனே வரணும்.. "அவர்" மாதிரி இழுக்க கூடாது!
பாஜகவில் இணையவில்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் தெளிவுபடுத்தி உள்ளார்
சென்னை: "தேவைப்படும்போது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும்.. மக்கள் அழைக்கும்போது விஜய் அரசியலுக்கு வருவார்" .. என்று சொல்லியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதெல்லாம் வேலைக்கு ஆகிற வேலையாகத் தெரியவில்லை.
அரசியல் அபிலாஷைகளுடன் இருக்கும் நடிகர்கள் எல்லோருமே உடனடியாக களத்தில் குதித்து விடுவதில்லை. பயந்து நடுங்குகிறார்கள் உள்ளே வருவதற்கே. எப்போதாவது ஒரு சிலர்தான் தைரியமாக இறங்குகின்றனர். சாதிக்கின்றனர்.. சாதிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் இருப்பவர்கள்தான் துணிச்சலுடன் களத்தில் புகுகின்றனர்.
மாறாக சுயநலமாக இருப்பவர்கள், தங்களுக்குத் தேவை என்றால் மட்டுமே அரசியலுக்கு வர விரும்புபவர்கள்., வெறும் சினிமா பிரபலத்தை மட்டுமே வைத்திருக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வர ரொம்பவே தயக்கம் காட்டுகின்றனர். காரணம் அவர்களுக்கு அரசியல் தெரியாது என்பதுதான் அல்லது மக்களை சரியாக புரிந்து கொள்ளும் திறன் இல்லாததுதான்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்து தடை தவறானது- மேல்முறையீட்டு வழக்கில் அதிரடி தீர்ப்பு
பிரபல்யம்
குறிப்பாகவே நடிகர்களுக்கு என்று வருவது பெரும்பாலும் அவர்களது நடிப்பு சார்ந்த பிரபல்யம்தான். அதுதான் அதிகமாக இருக்கும். அதைத் தாண்டி ஒரு நடிகரை மக்கள் தங்களுக்கு நெருக்கமானவராக, முக்கியமானவராக, தலைவராக பார்ப்பது என்பது அரிதிலும் அரிது. எம்ஜிஆருக்கு மட்டுமே அது சாத்தியமானது. அதனால்தான் அவரால் சாகும் வரை முதல்வராக இருக்க முடிந்தது.
விஜயகாந்த்
விஜயகாந்த்தும் கூடத்தான் முயற்சித்தார். அவருக்கும் கூட மக்கள் ஆரம்பத்தில் நல்லஆதரவைக் கொடுக்கவே செய்தனர். ஆனால் அவரது பாதையிலிருந்து என்று சரிந்து விலகினாரோ அன்றே மக்களும் அவரிடமிருந்து விலகிப் போய் விட்டனர். தேமுதிக இன்று தேய்ந்து போனதற்கு அதுதான் முக்கியக் காரணம். அத்தோடு அவரது உடல் நலமும் கூடவே நலிவடைந்ததால் தேமுதிகவால் மீண்டும் எழுந்திருக்க முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது.
பாஜக
இப்போது விஜய் விவகாரத்திற்கு வருவோம்.. விஜய்யை வளைக்க, மடக்க சில கட்சிகள் தொடர்ந்து முயன்று கொண்டுதான் உள்ளன. அது சில நேரம் வெளிப்படையாகவே தெரியும்.. பல நேரம் மறைமுகமாகவும் முயற்சிகள் நடக்கும். குறிப்பாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தங்கள்பக்கம் கொண்டு வர பாஜக தரப்பு சமீப காலமாக முயற்சிப்பதாக செய்திகள் உலா வருகின்றன. எஸ்.ஏ.சியை மடக்கி விட்டால் விஜய்யை ஆப் செய்து விடலாம் என்பது பாஜகவின் எண்ணமாகக் கூட இருக்கலாம்.
குஷ்பு
ஆனால் அதற்கான வாய்ப்பே இல்லை என்று எஸ்.ஏ.சி சொல்லியுள்ளார். ஆனால் இப்படி ஒரு பேச்சு வந்ததிலிருந்தே தெரிந்து விட்டது.. பாஜக முயற்சிகளைத் தொடங்கி விட்டது என்று. இப்படித்தான் குஷ்பு விவகாரத்திலும் ஆரம்பத்தில் பேச்சு எழுந்தது. குஷ்பு ஆவேசமாக பொங்கல் கூட வைத்தார். ஆனால் கடைசியில் என்ன நடந்தது.. கப்சிப்பென தனது கணவரோடு போய் கட்சியில் சேர்ந்து விட்டார்.. குஷ்புவின் செல்வாக்கும் அத்தோடு சரிந்து போய் விட்டது.
குழப்பம்
இன்று எஸ்.ஏ.சி.யிடம் வந்து நிற்கிறது இந்த பேச்சுக்கள்.. அதை விடுங்க.. எஸ்.ஏ.சி. இன்று ஒன்றைச் சொல்லியுள்ளார். அதைப் பார்க்கலாம்.. மக்கள் அழைக்கும்போது விஜய் அரசியலுக்கு வருவார்.. தேவைப்படும்போது விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக மாறும் என்று அவர் கூறியுள்ளார். இது குழப்பமாக இருக்கிறது. மக்கள் யாரை எப்போது அழைத்தார்கள்.. அவர்களுக்கு எப்போதுமே தேடல் இருந்து கொண்டுதான் உள்ளது. அதை சரியாக புரிந்து கொண்டு தலைவர்கள்தான் மக்களிடம் போக வேண்டுமே தவிர.. மக்கள் எதற்காக ஒருவரை வெற்றிலை பாக்கு வைத்துக் கொண்டு அழைக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை.
அரசியல் வருகை
அதேபோல தேவைப்படும் என்று கூறியுள்ளார் எஸ்.ஏ.சி. யாருக்கு தேவைப்படும்போது.. அவருக்கா அல்லது விஜய்க்கா அல்லது மக்களுக்கா என்ற கேள்விகள் அடுத்து எழுகின்றன. தேவைக்குத்தான் கட்சி என்றால் அது நிச்சயம் சமூகப் பார்வை கொண்ட கட்சியாக இருக்க முடியாது. அது சுயநலம் சார்ந்த கட்சியாகத்தான் இருக்க முடியும். இப்படித்தான் ஒரு நடிகர் ரொம்ப வருஷமாக வருவேன் வருவேன் என்ற பிலட்டப்போடு மட்டும் அரசியலில் இருந்து வருகிறார். மாபெரும் ஹீரோவாக துணிச்சல் மிக்க ஹீரோவாக பார்க்கப்பட்ட அவர் அரசியல் விஷயத்தில் ரொம்பவே சறுக்கிப் போய் விட்டார்.
மாற போகிறாரா?
அதேபோல விஜய்யையும் மாற்ற போகிறாரா எஸ்.ஏ.சி என்ற கேள்வி எழுகிறது. வரணும்னு நினைச்சா உடனே வரணும்.. தேவைக்கேற்றாற் போலத்தான் வருவேன்.. மக்கள் சொன்னாதான் வருவேன் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தால் அந்த நடிகர் போலத்தான் இவரின் கதையும் மாறிப் போகும். வரணுமா.. உடனே வந்துரனும்.. வந்த பிறகு மக்களிடம் போக வேண்டும். தன்னை நிரூபிக்க வேண்டும். மக்கள் ஆதரவு இருந்தால் ஜெயிக்கலாம்.. அவ்வளவுதான்.. இதைத்தான் விஜயகாந்த் செய்தார்.. அதனால்தான் அவரது துணிச்சல்தான் மக்களுக்கு பிடித்து அவரைத் தூக்கி விட்டது..
கை கொடுக்குமா?
அரசியல் விவகாரத்தை பொறுத்தவரை எஸ்.ஏ.சியின் திட்டங்கள் விஜய்க்கு கை கொடுக்குமா என்று தெரியவில்லை. அவருக்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் நிறைய செல்வாக்கு உள்ளது. பெரிய ரசிகர் படையும் உள்ளது. அவரைப் போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வரும்போது நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் முடியும். எனவே வர வேண்டும் என்றால் டக்குன்னு கில்லி மாதிரி வந்து விட வேண்டும்.. மாறாக ஆறப் போட்டு நீர்த்துப் போகச் செய்தால் அது குழப்பத்தில்தான் போய் முடியும்.
என்ன முடிவு?
எனவே விஜய்யிடமே இந்த முடிவை எஸ்.ஏ.சி. விட்டு விட வேண்டும்.. அவருக்கு விருப்பம் இருந்தால் வரட்டும்.. வந்து ஏதாவது செய்யட்டும்.. அதேசமயம், தேவைக்கேற்றாற்போல்தான் வருவோம் என்ற முடிவுக்கு மட்டும் போய் விடகூடாது.. அது செல்வாக்கை சிதைத்து விடும்.. அதற்கான சிறந்த உதாரணத்தை எல்லோருமே கடந்த 20 வருடத்திற்கும் மேலாக கண்கூடாக பார்த்து கொண்டிருக்கிறோம்.. பார்க்கலாம் விஜய் என்ன முடிவெடுப்பார் என்பதை!!